தி.மு.க. மகளிர் அணி மாநில மாநாடு – பாண்டிச்சேரி 16.11.2013

எழுதினார் நம் தலைவர் -
``ஏ, வீரப் புதல்வா! தலை நிமிர்ந்து பார் - மேனாடுகளை!
ஆங்கு தழைத்தோங்கி நிற்கிறது பெண்களுரிமை!
அதனால் அவை அடைகின்றன மேன்மை!
`மங்கையர்தான்’ நம் நாட்டின் பொக்கிஷம் என்பதை மறவாதே’’, 
என்று `இளமைப்பலி’ என்கின்ற தன் முதல் கட்டுரையிலேயே, அன்றே பெண்கள் உரிமை குறித்ததொரு நற்கனவு கண்ட நம் தலைவரது  வழிகாட்டுதலுடன்;
காரைக்குடி, கானாடுகாத்தானில், செட்டி நாட்டரசர், செல்வந்தர் பலர் அவருடன் விருந்துண்ட பின்பு அளவளாவக் காத்திருக்கையில், அந்தப் பகுதியில் சுயமரியாதை இயக்கக் காலத்தில் அறிவுப் பணியாற்றிய அம்மையார் வை.சு.மஞ்சுளா அவர்களது இல்லம் எங்கே எனக் கேட்டறிந்து, அவர்களைச் சென்று சந்தித்ததன் மூலம், ``பெண்களுக்கு எங்கே மரியாதை தரப்படுகிறதோ அங்கே தேவதைகள் வசிக்கிறார்கள்’’ என்று உலகிற்கு உணர்த்திய, தமிழ்நாட்டு `ஈமென் டிவெல்ரா’.
	"ஒவ்வொரு  சொல்லுக்கும்   சிந்தனைக்கும் பின்னே  ஒரு  வர்க்கத்தின்  முத்திரை  இருக்கிறது.  மார்க்சியத்தின் வீரியம் லெனினிடத்தில் இருக்கிறது" என்று நம்பிய  பேரறிஞர், ஆங்கிலப் பேச்சில் ``ஓராயிரம் மேடை வீரர்’’ என்று புகழப்பட்டவர்.
	``ஜனநாயகம் என்பது  ஒரு வாழ்க்கை  முறையானால், அது அறிவும், இதயமும்,  இணைந்ததாக இருந்தாலே மனிதனின்  முழு வாழ்விற்கும், முழு வளர்ச்சிக்கும் அது  நிலைக்களனாக அமையும்’’ என்கிற உறுதியுடனிருந்த பேரறிஞர் அண்ணா,   
	இனவழிச்சிந்தனை (Racial Outlook), நிலவழிச்சிந்தனை (Geographical Outlook), அரசியல், பொருளாதார வழிச்சிந்தனை (Politico - Economical Outlook) ஆகியவையே அவர் தம் வரலாற்றுத் தடம்.
•	தமிழ்நாடு  பெயர் மாற்றம் 
•	சுயமரியாதை  திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுத்தது
•	ஹிந்திக்கு  இடமளிக்காத இருமொழிக் கொள்கை  
முதலியன  முத்தான  அவரது  சாதனைச் செப்பேடுகள்.  
	பேரறிஞர் எழுதிய முதல் கட்டுரை ‘மகளிர் கோட்டம்’ - தமிழ் மருத்துவர் மாசிலாமணி நடத்திய ‘தமிழரசு’ என்னும் தன்மான இயக்க ஏட்டில் 1931ம் ஆண்டு வந்தது.
	‘இளமைப் பலி’ எனும் நம் தலைவரது முதல் அச்சு வாகனம் ஏறிய கட்டுரை 
திராவிட நாடு இதழில் 26.04.1942இல் வெளிவந்தது. 
அறிவுமணம் கமழும் பெண்களது உரையாடல்களை தனது "அந்திக் கலம்பகம்" கட்டுரைகளில் வடித்தவர் பேரறிஞர். 
நம் தலைவரோ,
"இங்கு ஏணை! அங்கு ஏரோப்ளேன்! 
இங்கு அரசமரம்! அங்கு ஆராய்ச்சிக்கூடம்! 
என்று இரஷ்ய நாட்டுப் பெண்கள் போல் நம் பெண்கள் முன்னேற வேண்டுமென “இங்கல்ல இரஷ்யாவில்” எனக் கட்டுரை தீட்டினார் - ‘உணர்ச்சி மாலை’ என்னும் தன் தொகுப்பில்.
	“பெண் இனம் முழுவதையும், அனைத்துத் தொழில் துறைகளிலும் மீண்டும் புகுத்துவதுதான் பெண்களின் விடுதலைக்குரிய முதல் நிபந்தனை” என்றார் எங்கெல்ஸ். 
	“ஏழை அழுத கண்ணீர் மட்டுமல்ல, ஏந்திழையர் சிந்திடும் கண்ணீரும் நமது சமுதாயத்தை நாசமாக்கும் நச்சு நீராக மாறும்”  என்கிறார் பேரறிஞர்.
	"பெண்ணின் மொழியே ஆட்சி மொழி" எனப் பிரகடனம் செய்தார் தந்தை பெரியார்.
	பெண்ணடிமையைக் களைந்தெறிந்து, பெண்ணின் பெருமையை உணர்த்துவதற்காக எழுந்ததே பெரியாரின் தன்மான இயக்கம் - பகுத்தறிவு இயக்கம். அதனை அடியொற்றி எழுந்த நமது தலைவரது ஆட்சியிலேதான், 1989ம் ஆண்டு பெண்களுக்குச் சொத்தில் சம உரிமையும், வேலை வாய்ப்புக்களில் 30 சதவிகிதம் வழங்கும் சட்டமும் கொண்டு வரப்பட்டது. 1996இல் நமது தலைவரது ஆட்சியிலேதான் உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவிகிதமும் ஒதுக்கப்பட்டது.
	சென்னை, பெத்து நாயக்கன்பேட்டை, டி.டி.வி பள்ளியில் மகளிர் மன்றத் துவக்க விழாவிலே 1956 இல் கலந்து கொண்டு சிறப்பித்த பேரறிஞர் அண்ணா பேசுகிறார்:
"நாம் சார்ந்துள்ள இயக்கம், மாதர் குலத்திற்கு உண்மையான விடுதலையும், உரிய பெருமையையும் தேடித் தரும் இயக்கமாகும்.
இந்த மகளிர் மன்றம் செய்ய வேண்டுவதென்ன?
அறிவைப் பயன்படுத்துபவர்களாக, உரிமை உணர்ச்சி கொண்டவர்களாக, நாட்டை மீட்கும் விடுதலை வேட்கை கொண்டவர்களாக நமது தாய்மார்களைஆக்குவதுதான்."
1956 இல் பேரறிஞர் வாழ்த்துடன் விழாக் கண்ட அந்த மகளிர் மன்றம் தான், இன்று நம் தலைவரின் வழிகாட்டுதலோடு மகளிர் அணியாக மலர்ந்து, பல மகளிர் கருத்தரங்குகளைக் கண்டு, இதோ இன்று, இங்கே இரண்டு நாட்கள் நடக்கும் பெருவிழாவாக பரிமாணம் பெற்றிருக்கின்றது.
1921ம் ஆண்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது விதவைகளின் தொகையை வெள்ளையர்கள் வெளியிட்டனர்.
1 வயதுள்ள விதவைகள்				-	597
1 முதல் 2 வயதுள்ள விதவைகள்			-	497
2 முதல் 3 வயதுள்ள விதவைகள்			-	1247
3 முதல் 4 வயதுள்ள விதவைகள்			-	2831
4 முதல் 5 வயதுள்ள விதவைகள்			-	6701
அந்த நிலை அடியோடு மாறி இன்றைக்கு, தேசீய இனநீதி, சமூகநீதி, வர்க்க நீதி, பால்நீதி, சிறுபான்மை நீதி ஆகியவற்றை அமல்படுத்தியவர் நம் தலைவர். அனைத்துத் தரப்பிலும் மாற்றங்களையும், திட்டங்களையும், செயல்முறைகளையும் கொண்டு வந்தது இன்றைய நமது கழக அரசு; மிகக் குறிப்பாகப் பெண்களது ‘புலிப்பாய்ச்சல்’ என முடுக்கி விடப்பட்டிருக்கின்ற "மகளிர் சுய உதவிக் குழுக்கள்", பெண்களை பிறர் சார்பு அற்றவர்களாக, தமக்கான பொருளாதார உரிமை பெற்றவர்களாக ஆக்குகின்ற அருமருந்தாகத் திகழ்கின்றன;
1938 இந்திப் போரின் போது தண்டவாளமெனப் பெரியாரால் அன்பாக அழைக்கப்பட்ட பெரியவர் ரங்கராசும், பெரியவர் எஸ்.வி.லிங்கமும் இணைந்து திருவாரூரிலிருந்து சென்னைக்கு தந்தி கொடுப்பார்களாம்:
"பதினைந்து சேலைகள் அனுப்பப்பட்டுள்ளன" என்று; 15 பெண்கள் என்றால் உளவுத்துறை கண்டு பிடித்து விடுமே என்பதால். மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார், டாக்டர்.தர்மாம்பாள், குஞ்சிதம் குருசாமி தொடங்கி, அருள்மொழி அம்மையார், பொற்செல்வி அம்மையார், சத்யவாணிமுத்து அம்மையார் என இன்று வரை நீள்கிற அப்பட்டியலின் எழுச்சிமிகு நீட்சியாக இன்று பல லட்சம் சேலைகள், நம் தலைவரது தலைமையில் இம்மாநாட்டில் பங்கேற்கின்றன நெஞ்சில் பயமின்றி; ஆனால் நேர்மைத் திறனுடன்.
"வரலாற்று ரீதியான ஆணாதிக்கத்தையும், அதற்கு எதிரான போராட்டத்தையும் மிகச் சுயேட்சையாக நாம் கண்டறிய வேண்டுமாயின், கிராமியப் பண்பாடுகள், நடத்தைகள், வழக்குகள் என அனைத்திலும் தேட வேண்டும். இங்குதான் அவை எந்தவிதமான போலித்தனமும் இன்றி எதார்த்தத்தினைப் பிரதிபலித்த வண்ணம், நேர்மையாக இயங்குகின்றன’’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.  சமுதாயச் சுமைகள் எப்படி பூர்சுவா அல்லாத பாட்டாளிப் பெண்கள் மீது திணிக்கப்படுகின்றது என்பதை, பெண்கள் குறிப்பிடத்தகுந்த அளவு முன்னேற்றம் அடைந்திருக்கின்ற இந்த 21ம் நூற்றாண்டில், 
இந்தக் கணத்தில் நாம் நினைத்துப் பார்த்தல் வேண்டும். ஐரோப்பாவில் வரைமுறையற்ற சுதந்திரத்தினைக் கோரும் பெண்ணிற்கும், அடிப்படை தேவையான நீர் மற்றும் விறகைக் கோரும் மூன்றாம் உலகப் பெண்ணிற்கும் இடையில் ஒன்றுபட்ட சமுதாயப் பார்வை என்பது எப்படி சாத்தியம்? 
மூன்றாம் உலக உழைக்கும் வர்க்க, கிராமப்புற அடிமட்ட பெண்களின் வாழ்க்கையை உயர்த்தக் கோரும் கோரிக்கையும், பெரியாரின், `மதம், குடும்பம் ஆகிய நிறுவனங்களிலிருந்து விடுபடுதலும்தான்’ பெண்ணியத்தின் அடிப்படை என்பதை கவனத்தில் கொண்டு, பெண்களாகிய நாம், `நமது ஆதி சொத்தாகிய, இயற்கை வளம், அதன் மீதான அறிவியல், விவசாயம் சீர்குலையா தொழிற்சாலைகள் முதலியவற்றை மீண்டும் முன்னெடுக்க வேண்டும்’.  வெகுஜன இதழ்கள், ஊடகங்கள், நுகர்வுக் கலாச்சாரம் ஆகிய மாயைகளிலிருந்து நாம் வெளிவரவேண்டும்.
சிந்திக்கின்ற, பகுத்தறிவுப் பெண்கள் என்றும் தலைவர் தலைமையிலான நம் கழகத்தின் பக்கம்தான் என்பதைத் தற்காலிகமாக மறந்து விட்டு, நேற்று வந்து, இன்று ‘நாற்காலி’ கனவு காணும் புஸ்வான நாயகர்களின் கூட்டப்பட்ட பேரணிகளைப் பார்த்தால், 
1962 இல் மாநிலங்களவையில் பேரறிஞர் தன்னைப் பற்றி மிகப் பெருமையாக:
"நான் திராவிட மரபு வழிப் பிரிவைச் சேர்ந்தவன்; நான் என்னை திராவிடன் என்று சொல்லிக் கொள்வதிலே பெருமை அடைகிறேன்; திராவிடர்களிடம் திண்ணியமானதும், தனித்தன்மை பெற்றதும், வித்தியாசமானதுமான ஒன்று நாட்டிற்கு வழங்குவதற்கு இருக்கிறது என்பதுதான், நான் திராவிடன் என்று சொல்லிக் கொள்வதற்கு ஒரே காரணமாகும்" என்றார்.
திராவிடத்து மகளிராகிய, திராவிட முன்னேற்றக் கழகத்து மகளிரணியாகிய நாமும் பெருமையோடும், திண்ணியத்தோடும், தனித்தன்மையோடும் இந்த உணர்வுமிகு மாநாட்டில் சொல்லிக் கொள்வோம் - என்றும் நம் ஒப்பற்ற ஒரே தலைவர் வழி நிற்போம் என்று! - மார்க்சும், எங்கெல்சும் சொன்னது போல - சொல்லிக்கொள்வோம். 
"இழப்பதற்கு விலங்குகளைத் தவிர வேறொன்றுமில்லை - 
வெல்வதற்குப் புதியதோர் உலகம் இருக்கிறது"

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *