தேனம்மை லெக்ஷ்மணனின் “அன்ன பட்சி” கவிதை நூல் குறித்து ஒரு உரையாடல்

"காற்று ஒரு போதும் 
	ஆடாத மரத்தைப் பார்த்ததில்லை
	காற்றில் 
	அலைக்கழியும் வண்ணத்துப் பூச்சிகள், 
	காலில் காட்டைத் தூக்கிக்கொண்டு அலைகின்றன"
 
எனும் தேவதச்சனின் வரிகள் எனக்கு மிக விருப்பம். எப்போதும் ஒரு கவிதையைத் தூக்கிக் கொண்டும் அலையும் மனம் கொண்டவர்களுக்குக், கவிதைகளைப் புத்தக வடிவில் பார்க்கையில், அதன் பாரம் தாங்காமல் உறைந்தோ, ஓடியோ, மலர்ந்தோ சுருங்கியோ, செத்தோ, உயிர்த்தோ, வாழ்கின்ற அனுபவம் வாய்த்துவிடுவது இயல்பானதுதான். காலம் தரும் அனுபவத்தை இன்னொரு மனம் அள்ளித் தர, அதனைத் தன் கரமென்று அது நினைத்திருக்க, நமக்கது பாதாளக் கரண்டியாக வாய்த்துவிடுகின்றது. சிலவற்றைக் கசடென்று அக்கரம் தள்ளலாம் - ஆனால் பாதாளக் கரண்டிகள் பாரபட்சமற்றவை. அடர்த்தியானவற்றைக் கல்லென்றான்றாலும், வைரமென்றாலும் அவ்வாறே நமக்களிப்பவை. ஒரு கவிதைப் புத்தகமும் அவ்வாறான பாதாளக் கரண்டியே. கவிதை என்றால் என்ன எனும் ஒரு பொதுக் கருத்திற்கு எப்போதும் வர இயலாது என்றாலும், ஆனந்தின் பின்வரும் இக்கூற்று ஒரு சிறு தெளிவைத் தரலாம் – 
	"கவிதைகளையோ கதையையோ படிக்கும்போது விமரிசனப் பார்வையுடனேயே படிப்பது என்பது இப்போது ஒரு வழக்கமாகிவிட்டது. 'வாசித்தல்' என்னும் அனுபவம் என்பது இப்போது பத்தாம்பசலித்தனம் என்று ஆகிவிட்டது. ஒரு கவிதையை ஒருவர் படிக்கும் போது ஏற்படும் அனுபவம், அப்போதைக்கு அவருக்கு ஏற்படுவது. வேறொருவருக்கு அது வேறு மாதிரியான அனுபவத்தைத் தரலாம். அல்லது ஒருவருக்கே கூட வேறொரு தருணத்தில் அது வேறுமாதிரியான அனுபவம் கொடுக்கக்கூடும் என்கிற சாத்தியத்தை மறுப்பது, தன் அனுபவ விரிவின் சாத்தியத்தை அவரே குறுக்கிக்கொள்கிறார் என்பதாக முடியும்.
	கவிதையின் சாத்தியங்கள் எந்த அளவுக்குக் கவிதையில் உள்ளதோ அந்த அளவுக்கு வாசிப்பவரின் மனத்திலும் இருக்கிறது என்பதுதான் உண்மை. படிக்கும்போது கட்டவிழ்ந்த மனத்துடன் படிப்பது, புதிய பார்வைகளையும் புதிய விமரிசனக் கோணங்களையும்கூட விளைவிக்க முடியும்" (கவிதை என்னும் வாள்வீச்சு - ஆனந்த் : 63, 64)
	ஆனால் இச் சமகால இலக்கிய உலகில், குழு மனப்பான்மையுடன் இயங்கும் சூழலில், பலருக்கு, இக் கட்டவிழ்ந்த மனம் சாத்தியப்படுவதாக இல்லை. இவர் இத் தளத்தில் இயங்குபவரா, நம் கருத்தியலோடு இயைந்தவரா, பெண்ணியவாதி, அரசியல்வாதி, போராட்டவாதி என அறிப்பட்டவரா, எனப் பல வியாதியைகளையும் எடைபோட்டுப்பார்த்தே, ஒரு கவிதைப் புத்தகத்தையும், அதன் படைப்பாளிையுயம் அணுகுகிறார்கள். முன்முடிவுகளும், Highbrow மனப்பான்மையும், இசங்களுக்குள் சிக்கியிருக்கின்ற எடைக்கற்களும், திருகு மொழியின்றி எழுதப்பட்டால் எளிமையின் கட்டை விரலைக் கேட்கின்ற துரோணாச்சார்யார்களும் நிறைந்திருக்கின்ற விமர்சன உலகில், தேனம்மை போன்ற ஒரு படைப்பாளியின் கவிதைகளுக்குள் ஒரு அனுபவமாகப் பயணம் செல்வது எனக்கு வகைதொகையில்லாமல் கலர்பூந்தியைச் சாப்பிட்ட பேருவகையாக இருந்தது. அதிலும் மணற்துகளும், கற்களும் நறநறத்தன தான். ஆனால், தித்தித்ப்பும், இயல்பான சுவைத்தல் அனுபவமும் தானே எனக்கு முக்கியம். அதிலும் ஒவ்வொரு கவிதையும் எனக்கு ஒரு மரணக்குழி அல்லது வாழ்வினுச்சி எனும் தேடல் அல்லவா!
	"காற்றில் வாழ்வைப் போல 
	வினோத நடனம் புரியும் 
	இலைகளைப் பார்த்திருக்கிறேன் 
	ஒவ்வொரு முறையும் 
	இலையைப் பிடிக்கும் போது 
	நடனம் மட்டும் 
	எங்கோ ஒளிந்து கொள்கிறது" 
எனும் தேவதச்சனின் நடனம் எனக்குக் கவிதைதான். சமயங்களில் அது இலை வரியில் இருப்பதில்லை, கிளை தாண்டிய வாண்வெளியில் வால் நட்சத்திரம் மின்னி மறைகின்ற பேரனுபவாய் ஒளிர்ந்தும், அணைத்தும் மிளிர்கிறது. அதன் திறவுகோல் ஒரு இலையில்தானே, இவ்வரியில் தானே என்பதால், அச்சு வடிவிலான எந்தவொரு கவிதைப் புத்தகமும் எனக்கு அணுக்கம் தான், நெருக்கம் தான் - அவ்வகையில் மிகுந்த மகிழ்வோடு- 
	"எளிமையானது உன் அன்பு 
	நடு ஆற்றில் அள்ளிய தண்ணீர் போல"
எனும் சுகுமாறனின் வரிகளோடு, தேனம்மையின் கவிதைகளுக்குள் பயணிக்கிறேன்.
	Albatross எனும் கடல் பறவையைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கின்ற - அது குறித்தே அதிகம் பேசியிருக்கின்ற எனக்கு அன்னபட்சியை அறிமுகப்படுத்தியிருக்கிற தேனம்மைக்கு நன்றி. மேலைநாட்டு இலக்கியக் கோட்பாடுகள், அவை தரும் விசாலாமான பார்வையும், நுணுக்கமான கேள்விகளும் எனக்கு மிகப் பிடித்தமானவை, முக்கியமானவை தான். ஆனால் அவை எவற்றின் துணையுமின்றி ஒரு சாரல் அனுபவமாக மட்டுமே இக்கவிதைகளுக்குள் நான் பயணப்பட்டேன் - ஏனோ, அன்பாதவனின்,
	"இறக்குமதி செய்யப்படும் இலக்கியக் கோட்பாடுகள், நமது மண்ணின் குரலை பதிவுகளை அழுத்திவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளன – 
	"யூகலிப்டஸ் மரங்கள் அழகானவைதான் 
	ஆனால் ஆடுகள் மேயும்
	புற்களுக்கான நிலத்தடி நீரைக் குடித்துவிடுகின்றன" 
எனும் வரிகள் நினைவிற்கு வந்தன.
	"அன்புக்காகவும் அதிதிக்காகவும் 
	மதுவுக்காகவும் 
	எங்களது அன்றாட உழைப்பு. 
	ஒவ்வொரு இரவையும் 
	கவிதையும் இசையும் 
	நடனமும் கொண்டு கொண்டாடுகிறோம்" 
எனும் ஆதிவாசிக் கவிதையைப் போலவே,
	"அன்னத்தின் இறக்கைகளாய் மனம் விரிய அனைத்தும் என்னுடையது" என அன்பின் கரம் விரித்துச் செல்வது தேனம்மையின் கவிதை பயணம்.
 	சுகிர்தராணியின் எனக்குப் பிடித்த கவிதை வரி ஒன்றுண்டு –
	"காமம் துளிர்விடும் சாயுங்காலம் 
	சருகுகள் பூத்துக்கிடக்கும் சாலைகளை 
	நத்தையின் கால் கொண்டு கடந்திருக்கிறோம்"
அய்யோ - எப்படிச் சொல்லிவிட்டார் என நான் வியந்த வரிகளவை - ஒரு உணர்வை நத்தையின் கால்கொண்டு கடப்பதென்பது - அதனை அவ்வளவு உய்த்து, மாய்த்து, அருந்துவது என்றே சுட்டுகிறது. தேனம்மையும் அன்பின் ஒவ்வொரு சொட்டையும், அதன் ஐம்புலன் அனுபவத்தின் காமத்தோடும் பதிந்திருக்கின்ற கீழ்வரும் கவிதை அற்புதம் – 

முத்துச் சிப்பி

நாட்காட்டியோ மணிகாட்டியோ 
திசைகாட்டியோ இல்லாத
ஊர்த்துவப் பொழுது 

தாம்புக் கயிறறுந்து குடம் 
மெல்ல மெல்ல மூழ்குவதுபோல
உன் முத்த அலைகளுக்குள் 
கிணற்றைப்போல என்னை 
விழுங்கிக் கொண்டிருந்தாய் நீ 

வினோத மேகம் போல என் உதடுகள் 
மழை பொழியப் பொழிய 
வெளுக்காமல் கறுத்து 
மீண்டும் மீண்டும் மழை தேடும் 
சாதகப்பறயைாய் நீ 

உதட்டுச் சிப்பிக்குள் சிக்கிய 
நன்னீர் சொட்டுப் போலும் 
அன்னியப் பொருள் போலும் 
இறுக்கி விளைந்த முத்தாய் என் உதடு 

பாதாளக் கரண்டிகளில் மாட்டி 
வெளிப்பட்ட போது நான் 
பாலைவனச் சோலை ஆகியிருந்தேன் 

பூக்களும் வண்ணத்துப்பூச்சிகளும் 
என்னைச் சுற்றிலும் 
இதில் வருகின்ற 'பாதாளக் கரண்டிகளில் மாட்டி வெளிப்பட்ட போது நான் பாலைவனச் சோலை ஆகியிருந்தேன்' எனும் வெளிப்பாடும்,
 
	'உதட்டுச் சிப்பிக்குள் சிக்கிய 
	நன்னீர் சொட்டுப் போலும் 
	அன்னியப் பொருள் போலும் 
	இறுக்கி விளைந்த முத்தாய் என் உதடு' 
எனும் பிரயோகமும் எனக்கு மிகப் பிடித்தமானதாக இருந்தது. 
	"வரைந்த சித்திரத்தில் 
	நான் மாட்டிக் கொண்டேன் 
	ஒரு கோடாக" 
எனும் நேயனின் கவிதைபோல தேனம்மையின் மேற்சொன்ன வரிகளில் நானும் கொஞ்சம் மாட்டித்தான் போனேன். 

	தேனம்மையின் கவிதைகளில் தொடர்ந்து வருபவை பொம்மைகள், புத்தகங்கள், சுற்றுச்சூழல் பற்றிய கவலைகள், கனவுகள் என்றாலும் இத்தொகுப்பின் பலம் இன்னதென்று அறுதியிட்டு விட முடியாதபடியான பல்வேறு பாடுபொருள்கள் தான். 
	"புஷ்பிக்காத பெண்மை பற்றி 
	கசிந்து பெருகாத முலைகள் பற்றிப்"
பேசிக் கொண்டிருக்கும் போதே 
	"சிகண்டியாய் இருப்பது எளிதல்ல..."
என்று அர்த்தநாரீஸ்வர உணர்விற்குள் சட்டென்று நம்மை இழுத்துவிடுகின்றார். பொம்மைக்காரிகளில், தோழி பொம்மை எனும் கவிதைகளாகட்டும், யசோதரா, முருதாடி எனும் கவிதைகளாகட்டும் - எல்லாவற்றிலும் தேனம்மையின் கவிதைகள் பெண்ணையே பற்றி நிற்கின்றன. அவளது இருப்பை, மொழியை, உணர்வை, காதலை, அன்பைக், காமத்தைக், கோபத்தை, வெறுப்பை - இப்படி பெண்ணைப் பிரதானமாக வைத்தே பேசுகின்றன. ஆனால் வெவ்வேறு மொழிப் பிரயோகங்களில்.
உதாரணமாக, 
	"வலதும் இடதும் பற்றி 
	பொம்மைகளை
	பொம்மைக்காரிகளிடம் கொடுத்தபின் 
	தனது மட்டுமேயான
	கரடி பொம்மையை 
	எடுத்து மார்போடு 
	அணைத்துக் கொண்டது குழந்தை" 
எனும்போது வெளிப்படுகின்ற மொழிநடை, 

தோழி பொம்மை

ஒவ்வொருவரிடமும் இருக்கிறது 
ஒரு கரடி பொம்மையோ 
தன்னைச் செதுக்கும் 
பெண் பொம்மையோ 
நெளிந்து நிற்கும் 
ஒரு தோழி பொம்மையோ 

சில பொம்மைகள் 
கைகூட்டி முழங்கால் மடித்து 
கண் சாய்த்து அமர்ந்து 
கண் கொட்டாமல் அல்லும் பகலும் 
கண்ணாடிக் கவருக்குள்ளிருந்த 
சிநேகிதனைப் பாத்தபடி 

அவர்கள் தன்னோடு 
தன் கவலைகளோடு 
பேசிக் கொள்ளும் போது 
காதுகள் கொடுத்து 

மகிழ்ச்சியாய் ஆடும் போதும் 
புன்னகைத்தபடி 
கூட இருப்பதே ஒரு தவமாய் 
விட்டுச் சென்ற இடத்திலேயே 
காத்துகிடந்து 

புறக்கணித்தோ பரணிலோ 
குப்பைத் தொட்டியிலோ 
வீசிச் செல்லும் 
நண்பர்களைக் குறை கூறாமல் 
அங்கும் மெளனமாய் 
அங்கீகரப்பும் அனுமதிப்புமாய். 
எனும் கவிதையின் மொழிநடையோ நமக்கு பெரிதான ஈர்ப்பினைத் தருவதில்லை. வெகு சாதாரணமான, தேய்ந்த சொற்களால் ஆன கவிதைகள் அவை. ஆனால் இதே கவிஞர், 'யசோதரா' எனும் கவிதையில் எழுதுகிறார் – 

	"அமிர்தம் அள்ளி உண்டு சலித்ததுனுக்கு 
	நீ சிதறிச் சென்ற 
	துளிகளின் மிச்சமெனக்கு 
	நட்ட நடு இரவில் இற்றது அறுத்து 
	இந்திரப்பிரஸ்தம் நீங்கி 
	நீ வானப் பிரஸ்தம் ஏக.... 
	கடமையாற்றில் கையது நிலையிலிட்ட
	மேலான ஆசையும் பற்றும் 
	அறுத்துத்தான் என் வாழ்வும்"
எனும் போது அழுத்தமும், கூர்மையும் கொஞ்சம் கூடுகின்ற மொழியாகின்றது. 'காளியை'த் தன் Alter - Ego வாகத் தொடர்ந்து முன்னிறுத்துகின்ற தேனம்மையின் அப்பிம்பம் குறித்த அனைத்துக் கவிதைகளின் மொழிநடையும் அவ்வாறே தனித்தன்மை உடையனவாக இருக்கின்றன. இந்த முரண் எனக்கு வியப்பும், படைப்பாளி மனதின் கருக்கொள்ளலை, அவரது மனக்கண் வழியொழுகும் விரலசைவு அக்கருக்களின் தனித்தன்மைக்கேற்ப விதம் விதமாய் வார்த்துக் கொள்கிறதா எனும் கேள்வியையும் எழுப்புகின்றது.
	குறிப்பாக முருதாடி கவிதையைப் பாருங்கள் – 
	காலங்காலமாக பெண், பெண்மை இவற்றிற்கு குறியீடாகக் கட்டமைக்கப்பட்ட நிலா, மலர், மழை, தாமரை, இவற்றை உடைக்கும் விதமாக

"பெல்லாப் பூடம் 
அடம் சீண்டரம் 
லண்டி சகடை
குந்தாணி மட்டை 
காளி முருதாடி 
இதெல்லாம் அம்மாவின் 
வழங்கு பெயர்கள் அவளுக்கு 
காளி நான்தானம்மா 
குணங்கெட்டவளல்ல முருதாடி.... " 
எனும் கவிதை இத்தொகுப்பில் எனக்கு மிகப்பிடித்த கவிதை. இதிலும் வழக்கமான சொற்கள் தான் - ஆனால் அதன் உள்ளடக்கம் ஒருவித அடர்த்தியான காளி மனோபாவத்திற்குள் நாம் உட்புக, மிகச் சாதாரண புழங்கு சொற்களின் வழி வெகு சாமர்த்தியமாக நம்மை அழைத்துச் செல்கிறது. ஆழமான கவிதை, சிக்கல் நிறைந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. இக்கருத்தை ஆனந்த் 'கவிதை எனும் வாள்வீச்சு' புத்தகத்தில் யுவனின் இரண்டு கவிதைகளைச் சுட்டி மிக அழகாக விளக்கி இருப்பார். யுவனின் அக்கவிதைகள் இதோ:
உருமாற்றம்

கொக்கின் பெயர் கொக்கு 
என்றறிந்தபோது 
வயது மூன்றோ நாலோ. 
கொக்கென்றால் வெண்மையென 
பின்னால் கற்றேன். 
அழகு என பறத்தல் என 
விடுதலையென போக்கின் கதியில் 
தெரிந்துகொண்டது. 
வேலையோ வெய்யிலோ 
வார்த்தையோ வன்முறையோ 
உறுத்தும்போது கொக்கு 
மிருதுவென உணர்ந்தது. 
அவரவர் வழியில் வளர்கிறோம் 
கொக்கு அடுத்து என்ன 
ஆகும் எனும் மர்மம் 
உடன் தொடர.

குறிப்பு

கிளியென்று சொன்னால் 
பறவையைக் குறிக்கலாம். 
பச்சையைக் குறிக்கலாம். 
மூக்கைக் குறிக்கலாம். 
பெண்ணைக் குறிக்கலாம். கூண்டுச் 
சிறையைக் குறிக்கலாம். 
சமயத்தில் அது 
கிளியையும் குறிக்கலாம். (கவிதை என்னும் வாள்வீச்சு - ஆன்ந்த : 108, 109)
	தேனம்மையின் சாமி கவிதை அப்படி ஒரு கவிதைதான். மிக நுட்பமான, அதி ஆழமானதொரு உணர்வைக் குச்சி ஐஸ் கைமாற்றும் குழந்தைபோல இக்கவிதையில் மிக எளிமையாக நமக்குள் இறக்கி வைக்கிறார். 

சாமி

நீ உலவும் இடத்தில் உலவி 
உண்டக்கட்டி உண்டு 
ஓரமாய் உறங்குகிறேன் 
தாவாங்கட்டை தாடி சூழ 
தலை சுமந்த சடைமுடியுடன் 
உன்னைக் காண 
வழிமோதி வருவோர்க்கு 
தீவட்டி பிடிக்கிறேன் 
வழி விடுமாறு 
தோள்களில் தாங்கி 
பல்லாக்கு சுமக்கிறேன் 
தாங்கு கம்புகளிலிருந்து 
தோளுக்கு மாறும்போது 
எலும்புவழி புகுவாய் 
இனம் புரியாக் குளிராய் 
இன்ப நடுக்கமாய் 
நீ என் சாமி.
 "இன்ப நடுக்கமாய்" எனக் கடவுளைச் சொன்ன முதல் ஆசாமி இவராகத்தானிருப்பார். அழகியிலின் மென் குளிர் போர்த்தி விவரணைக் கவிதைகளின் வகைமையில் (Narrative Poems) இருக்கின்ற சாட்சியம் எனும் கவிதையும், பச்சை வண்ணப் புடவைக்காரி எனும் கவிதையும் எனது கிடை கவிதையை நினைவூட்டியது. 

சாட்சியம்

இக்கரையில் நான் மண்சட்டிகளுடனும் 
அக்கரையில் நீ உன் ஆடுகளோடும் 
அவரவர் சந்தைக்கு 
என் பின் கொசுவச் சேலை படபடக்க 
தார்பாய்ச்சிய வேட்டி துரட்டியுடன் நீ 

கொண்டை கெளுத்தி 
வாவல் வவ்வா சிறா சிணுங்கித் திரிய 
அவரவர் பாரங்களை அப்படியே விட்டு 
மெல்ல இறங்கி உன் மேல் துண்டால் 
வீசிப் பிடித்தோம் மீன் தின்னும் ஆசையில் 

சுழல் போல் காட்டாறு கணுக்காலிலிருந்து 
முழங்காலேறி பேய் போல ஆளடித்து 
தலை சுழற்றி மூச்சு முட்ட 
அடித்துப் பிடித்து கரை சோந்தோம் 
என் சுருக்குப் பை உன் கையிலும் 
உன் மேல்துண்டு என் கையிலும் பிடித்து 

உன் சுருக்குப் பை உன் துரட்டியிலும் 
உன் மேல் துண்டு என் சும்மாடாய் 
திரும்ப அவரவர் சந்தைக்கு 

இருந்தபடி இருந்தன 
மண்சட்டிகளும் ஆடுகளும் 
மீன்கள் மட்டும் கையெட்டாமலே 

வெடவெடத்த பாதங்களின் பின்னே 
தவழ்ந்து வந்து கொண்டிருந்த 
ஈர சாட்சியாய் தண்ணீர்.

பச்சை வண்ணப் புடவைக்காரி

பழைய பேருந்துகள் சுற்றிச் செல்லும் 
தடமற்ற சாலையில் 
வாதுமை மரத்தின் கொட்டைகள் 
அங்கங்கே சிதறிக் கிடக்க 
ஒரு பச்சை வண்ணப் புடவையில் 
அவள் வந்தாள் 
அழகென்று சொல்ல முடியாது 
பெயரும் விழியும் 
சிரிப்பும் பழகுவதும் அழகு 
அறிந்திருந்தேன் அவளை முன்பே 
உருவம் அறியாமல் உருவாய் 
என் மனச் சித்திரம் போல் 
இருந்தாள் பிசகாமல் எளிமையாய் 
குழப்பமில்லாமல் சிக்கலில்லாமல் 
எப்போதும் அறிந்தவர் போல் 
பேசிக் கொண்டிருந்தோம் 
அவள் விழிகளில் இருந்தும் 
புன்னகையில் இருந்தும் 
என்மேல் மழைத்துளி 
சிதறிக்கொண்டே இருந்தது 
வெப்பமும் புழுக்கமும் 
புழுதியும் விடைபெற
எப்போது குளிர்ந்தேன் என்பது 
தெரியாமல் குளிர்ந்து கிடந்தேன்
சாலையோரக் கல் போல் 
விடைபெற்றுச் செல்லும்போது 
பட்டும் படாமல் கை பற்றி 
அழுத்திச் சென்றாள்
கைகளில் ஈரமாய் ஒட்டிக் கொண்டே 
கிடந்தது அவள் அன்பு.
	இவரும் கிடைபோடுபவன் என்றொரு கவிதை எழுதியிருக்கிறார். இக்கால முதலாளித்துவ சுரண்டல் அரசியலின் முதல் பலி மண்மணம் வீசக் கிடைபோட்டவனும், வியர்வை சிந்த உழைக்கும் விவசாயியும் தான் என்பதை வலிமிகுந்து,

"மண் மணம் வீசக் கிடைபோட்டவன் 
வெய்யிலிலும் மழையிலும் காய்கிறான் 
மொழிவிளங்காதவனின் 
நிலத்தை வளப்படுத்த" என்கிறார். 

	ஒரு தேநீரைக் கலப்பதும், பருகுவதும் ஜென் நிலைதான். ஆனால் அந்த அனுபவத்தை ஒரு நடனத்தோடு ஒப்பிட முடியுமா என் வியப்பாக இருந்தது இவரது சந்திரலேகா அல்லது நடனம் கவிதையை வாசிக்கையில். கவிதையை முடிக்கின்ற,
 
	"காலிக் கோப்பையில் வெற்று வெளியாய்
	தன் நடனத்தில் சுழன்றபடி 
	போய்க் கொண்டிருந்தாள் அவள்" 
எனும் வரிகள் கிளர்த்தும் உணர்வு பரவசமானது.
 
பெண் பருவமடைதல் என்பது வரமா, பாரமா - அது வளர்சிதை மாற்றமா, அல்லது பெருந்துயரச் சிலுவையா என்பதுவும், ஒரு ஆண் மனது இம் மாற்றத்தை எப்படிப் பார்க்கிறது, தேனம்மை, ஒரு பெண்ணாக இதனை எப்படிப் பார்க்கிறார் என்பதையும் எனக்கு நினைவூட்டிய கவிதை அவரது நிஜம் கவிதை.
நிஜம்

பதின்மத்திலேயே 
நின்றுவிட்டது என் வயது 
அதன் பிறகு வளரவேயில்லை 
வளர விரும்பவும் இல்லை 

வளரும் போதெல்லாம் வலிக்கிறது 
வளர்சிதை மாற்றத்தால் 

சிதைக்காமலே சிதைகிறது 
சின்னக் குழந்தைத்தனம் 

கள்ளத்தனம் 
எட்டிப் பார்க்கும் கண்கள் 
மெல்ல எழும்பிய தனங்களோடு 

சுமக்க ஆரம்பித்தபின் 
சுமையாய் கிடக்கிறது 
பெண்ணாய் நீண்ட நிஜம்.
 
இதோ சுகுமாறனின் ஸ்தனதாயினி கவிதை :

ஸ்தனதாயினி

இளகிய வெண்கலப் பழங்கள் 
உன் மார்பகங்கள் 
உள்ளே 
உயிர் தழைக்கப் பெய்யவெனத் 
திரண்டிருக்கும் பால்மேகம் 

ஒன்றில் 
தாய்மையின் கசிவு 

உன் இடது முலை அருந்துகையில் 
என் கண்களில் 
குழந்தைமையின் நிஷ்களங்கம் 
அப்போது உன் இடது முலை 
பரிந்து சுரக்கும் ஊற்று 

உன் வலது முலை அருந்துகையில் 
என் கண்களில் 
காதலின் உற்சவம் 
அப்போது உன் வலது முலை 
நெகிழ்ந்து பெரும் அருவி

குழந்தைமையும் காதலும் கனிந்த மனவேளையில் 
உன் மார்பகங்களின் இடைவெளியில் 
உணர்கிறேன் 
அமைதிக் கடலாய் ஒரு மூன்றாவது முலை. (பூமியை வாசிக்கும் சிறுமி - சுகுமாரன் : 144) இரண்டும் இருமாறுபட்ட உணர்வுகளைச் சுட்டுகின்ற கவிதைகள் - ஒரு அவயத்தை முன்வைத்து. 

	பெண்மையின் பூரித்தல் குறித்துத் தாய்மையும், காமமும் ததும்பச் சொல்கிறது சுகுமாறனின் கவிதை குழந்தமை கரைந்த கள்ளத்தனத்தின் பாரம் குறித்துப் பேசுகிறது தேனம்மையின் கவிதை.
	இந்த இருவேறு மனோபாவங்களினூடான பயணம்தான், அவற்றினூடான வெவ்வேறு சஞ்சாரம் தான், கவிதானுபவத்தை ஒவ்வொரு கணமும் புதுக்கத்துடனுடம், அடர்வுடனுடனும், கிளர்வுடனும் ஜீவித்திருக்கச் செய்கிறது.
	தலைப்புக் கவிதையான அன்ன பட்சி - முழுக்க உவமைகளால் கோர்க்கப்பட்டிருக்கும், ஒரு அழகிய கோலம் மட்டுமே. நிபந்தனைகளற்ற அன்பை எளிமையாகச் சொல்லி ஒரு உதட்டோரச் சுழிப்பைத் தருகின்ற அழகிய கவிதை அது.
	மிக சுவாரஸ்மானதொரு கவிதை அனாரைத் தராதீர்கள். அனார் என்கிற செம்மாதுளை எனக்கு மிகப் பிடிக்கும். அனார் என்கின்ற ஈழத்துக் கவிஞரையும் தான். அவரது கவிதைகளின் தீராக் காதலிநான். செம்மாதுளை குறித்து முற்றிலும் வேறான கோணத்தில்,
	"நேசிக்கும் இதயத்திலிருந்து வடியும் 
	குருதித் தணலை ஒத்திருக்கிறது 
	அதன் அடர்த்தி ரசம். 
	கசங்கிக் கலைந்த இதயங்களின் 
	கனவைப் பிரிப்பது போலிருக்கின்றது 
	சுற்றிய வெண்தோல். 
	எனக்காய் யாரும் 
	அனாரை வாங்கி வராதீர்கள்... 
	உங்களை நேசிப்பவர்களாகக் கருதும் 
	யாருக்கும் 
	அனாரைத் தராதீர்கள்" என்கிறார் தேனம்மை. 
பயத்தினாலும், சரித்திரத்தின் கசப்பான எடுத்துக்காட்டுகளாலும் அழிந்து போன நம்பிக்கையின் வடிவமாக இக் கவிதையைப் பார்த்தேன். சொல்லப்போனால் பச்சை வண்ணப் புடவைக்காரியைப் போல ஒரு கவிதையை எழுதிய தேனம்மையால் இப்படியும் எழுதமுடியுமா என்று தோன்றியது. ஏனெனில், கலை, இயற்கயைின் சிருஷ்டியை ரசித்தலுக்குரிய அவசியமான உள்ளங்களின் அன்பு என்கின்ற ஒன்றை உடைய கவிமனமாகவே அவரை நான் பார்க்கிறேன். கலர்ப் பூந்தியினிடையில் 'கடுக்கென்று' விழுந்த சிறுகல் இதுதான் போலும். ரசாயன ஆதிக்கத்தினிடையே புத்தகங்கள், புறச்சூழல் குறித்த ஆதங்கம், கடவுள் குறித்த தேடலும், உணர்தலுமானதொரு அனுபவங்கள், பெண்ணைச் சக்தியின் பிம்பமாய், அழித்தலின் உருவாய்க் காணும் போதே, (சூலும், சூலமும் கவிதையே சாட்சி) காமம் சார் இயல்பான பருவத்தினளாகவும் (பசலையல்ல கனவு) வெகு அப்பட்டமான possessiveness-ஐக் கொண்டிருக்கின்ற - அது ஆணோ, பெண்ணோ - மனோநிலையில் அன்பின் இம்சையைச் சகித்துக் கொண்டிருக்கின்ற, அதனை நியாயப்படுத்துகின்ற இயல்பினளாகவும், பெருகும் தாய்மையுடன் தன்னை உணர்ந்த பேருருவாக வெளிப்படுகின்ற இடத்திலாகட்டும் ("எல்லாம் உடைந்த விடியலில் தலை கோதித் தூங்கவைத்தேன் / அவளை விடுவித்த அந்த விடியலில் அந்த இரவு இன்னும் நேசிப்பிற்கு உரியதாய் இருந்தது")... தேனம்மையின் கவி உலகு என்னைக் கைப்பற்றி அழைத்துச் சென்ற அனுபவ விகசிப்பு எனக்கப் பிடித்தமானதாகவும், அது அறிவிக்கும் செய்தியை ஒரு சிறுமியைப் போல் ஏற்றுக் கொள்ளும் குதூகலத்தையும் எனக்களித்தது.
	"கவிதையை எதிர்கொள்வது வாழ்வில் முக்கியமானதொரு அனுபவத்தை எதிர்கொள்வதற்கு ஒப்பானதாகும். கவிதையை வாசிக்கும்போது சொற்களைத் தாண்டி, காலம் காட்டி நிற்கும் படிமங்களைக் கடந்த, ஆழ்ந்த அக அனுபவமாக விரியக்கூடியது கவிதை.
	வாசகன் கவிதையைப் 'புரிந்து'கொள்ள வேண்டியதில்லை. கவிதை எழுந்து விரியும் லயத்திற்கு, அது தனக்குள் எழுப்பக் கூடிய அதிர்வுகளை உள்வாங்கிக் கொள்ளும்படியாகத் தன் மனத்தைச் சுருதி சேர்த்து வைத்துக்கொள்ள வாசக மனம் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். உண்மையில் சங்கீதம் கேட்கும்போது இதுதான் நிகழ்கிறது. சங்கீதத்தை யாரும் 'புரிந்து'கொள்வதில்லை. உள்வாங்கிக் கொள்கிறார்கள். கவிதை வாசிப்பில் மட்டும் ஏனிந்தப் பாரபட்சம்? இப்படிக் கவிதையை உள்வாங்கிக்கொள்ள முடிந்தால்தான் கவிதையல்லாததையும் ஆழமற்று வெளிப்பட்டிருக்கும் கவிதைகளையும் இனம் காண முடியும்." (கவிதை என்னும் வாள்வீச்சு - ஆன்ந்த : 113, 114)
 	அவ்வனுபவம் இத்தொகுப்பில் எனக்குக் கூடி வந்திருக்கிறது என்றே சொல்லலாம் - வாழ்த்துக்கள் அவருக்கு! 
	பல கவிதைகளின் தலைப்புக்கள் என்னை மிக ஈர்த்தவை - தம் ஒரு சொல்லில் தாமாகப் பெரிதும் விரிந்தவை - மெளனக்கல், செள்ந்தர்யப் பகை, பசலையல்ல கனவு, தாம்பத்யக் குகை - இப்படி.... மற்றபடிக்கு, கண்ணை உறுத்துகின்ற வார்த்தை ஜாலங்கள், புஜபலம் காட்டுகின்ற பிரகடனங்கள், புதிர்ப்பாதை போடும் உவமான உவமேயத் திணித்தல்கள் - இவை எதுவுமே இதிலில்லை.
	அவ்வெளிமையே, தேநீர் பருகும் தீவிரத் தன்மையோடும், ஒத்திசைவோடும் நாம் ஒரு கலைப்படைப்பை அணுகவேண்டும் எனும் புரிதலுள்ள யாரையும் ஈர்க்கின்ற வலிமை வாய்ந்தது. 
	இன்னமும் எழுதுங்கள் தேனம்மை - உங்களது எளிமையை மென் மேலும் கூர் தீட்டிக் கொண்டு, மொழியின் தீச்சுடர் அதில் மென்மேலும் அடர்வு கூடி ஒளிரட்டும் - அடுத்தடுத்த தொகுப்புக்களில்! மனமார்ந்த வாழ்த்துக்கள்!
	"கலை ரசித்தலுக்கு அவசியமான உள்ளங்களின் அன்பு உறவு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் அடிப்படையில்தான் அமைய வேண்டும். கலைச் சிருஷ்டியைப் பார்ப்பவர் அது அறிவிக்கும் செய்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். கலைஞரும் அச் செய்தியைச் சரியாகச் சொல்லும் திறமை பெற்றவராக இருக்க வேண்டும். தேநீர் நிபுணர் கொபோரி என்சியூ, தாமே ஒரு சிறற்ரசர். அவர் கீழ்க்கண்ட நினைவுக்குரிய வார்த்தைகளை நமக்குச் சொல்கிறார், "நாம் மன்னரை எவ்வாறு அணுகுகிறோமோ அவ்வாறே சிறந்த ஓவியம் ஒன்றை அணுக வேண்டும். ஒரு கலை சிருஷ்டியை உணர வேண்டுமானால் அதன் முன்னர் பணிவுடன் அமர்ந்து மூச்சுக் காட்டாமல் அமைதியாய் அது கூறும் செய்திக்காகக் கிஞ்சித்தேனும் காத்து இருக்க வேண்டும். ஒரு தலை சிறந்த ஸுங் விமரிசகர் ஒரு முறை அற்புதமான தம் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவர் சொன்னார், "என் இளம் பிராயத்தில் எனக்குப் பிரியமான படங்களை வரைந்த கலைஞரைப் புகழ்ந்தேன். பின்னர் என் மதிப்பிடும் திறன் முதிர்ச்சியடைந்ததும் கலைஞர்கள் என்னை எதை விரும்ப வேண்டுமென்று கோரினார்களோ, அதை விரும்பியதற்காக என்னையே மெச்சிக் கொண்டேன்!" என்று. (கலையை ரசித்தல் - அறிஞர் ஓக்ககூரா காக்குஜோ, தமிழில்: பேராசிரியர் அ. பெருமாள்: 48, 49)

உதவிய நூல்கள்: 

1. அன்ன பட்சி - தேனம்மை லெக்ஷ்மணன்
2. கவிதை என்னும் வாள்வீச்சு - ஆனந்த் 
3. பூமியை வாசிக்கும் சிறுமி - சுகுமாரன்
4. தற்காலக் கவிதைகள் ஒரு பார்வை - அன்பாதவன்

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *