பாரதி திருவிழாவில் ஆற்றிய உரை – 11.12.2021

பாரதி -  ஷெல்லி
            வெயிலொளி எந்த பொருள் மீது பட்டாலும், அந்தப் பொருள் அழகுடையதாக தோன்றுமென்று ஷெல்லி என்ற ஆங்கில கவிஞர் கூறுகின்றார்.  எனக்கு எந்த நேரத்திலும் எந்தப் பொருள்களும் பார்க்க அழகுடையனவாகத் தோன்றுகின்றன.

ஷெல்லியின் ஏபிசைக்கிடியன் என்ற அற்புதமான காதல் கவிதையில் காணப்படுகின்ற
          “.................. as in the splendour of the Sun,
          All shapes look glorious which thou gazest on!”

என்ற வரியைத்தான் பாரதி மேலே குறிபிட்டுள்ளார் என்பதையும், இதன் மூலம் பாரதி ஷெல்லியை மிகவும் ஆழமாகக் கற்றிருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது. 

தமிழகம் தமிழுக்குத்
தகும்உயர் வளிக்கும்
தலைவனை எண்ணித்
தவங்கிடக் கையில்
இலகு பாரதிப்
புலவன் தோன்றினான்…
மண்டும் மதங்கள்
அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக்(கு)
அணையா விளக்கவன்.”
                           -பாவேந்தர் பாரதிதாசன்

அது எப்படி? 
எட்டயபுரத்தில் மட்டும் 
ஒருத்திக்கு நெருப்பைச் சுமந்த கருப்பை? 
அதுகூட சாத்தியம்தான்! 
ஆனால் இது எப்படி? 
ஏகாதிபத்திய எரிமலையை 
ஒரு தீக்குச்சி சுட்டதே... 
ஒரு வீரிய விதை 
முளைக்கும்போதே 
பூமியை ஜெயிக்கிறதே
அப்படித்தான் அது...  
பாரதி.. உன் பேனா தமிழ்த் தாயின் 
கூந்தலுக்குச் சிக்கெடுத்தது, 
கிழிசல் கோட்டு 
கவிதா தேவிக்குப் பீதாம்பரமானது”  
                                                           - வைரமுத்து.

"ஷெல்லியின் கில்டு"
                   ஆங்கிலக் கவிஞர்களாகிய ஷெல்லி, பைரன் ஆகிய இருவரது நூல்கள் மீதும் பாரதிக்கு எல்லையற்ற பற்று. சதாகாலமும் 'ஷெல்லி'யைக் கையிலேயே வைத்துக் கொண்டிருப்பார்.
               1902ஆம் வருஷம் எட்டயபுரத்திலே பெருமாள் கோவில் சந்நிதித் தெருவிலே பாரதி ஒரு சங்கம் தொடங்கினார். அதற்கு "ஷெல்லியின் கில்டு" (Shellian Guild) என்று பெயர். பின்காலத்திலே பாரதியாரின் "இந்தியா" பத்திரிகையில் உதவி ஆசிரியராகவிருந்த எட்டயபுரம்  பி.பி.சுப்பையா என்பவர் அந்தச் சங்கத்திலே ஓர் அங்கத்தவர். அப்போது பழனி தாலுக்கா ஆபீஸ் தலைமை குமாஸ்தாவாயிருக்கும் எட்டயபுரம் அ.கைலாசம் பிள்ளை என்பவரும் அதிலே ஓர் உறுப்பினர்.
             அந்தச் சங்கத்திலே பாரதியார் ஷெல்லியின் கவிதா ரஸங்களையும், பைரனின் தேசிய கீதங்களையும் படித்துக் காண்பிப்பார். அந்த அளவுக்கு ஷெல்லியின்மீது பற்று கொண்டிருந்தார். ஆகையால் ஷெல்லிதாசன் என்று ஒரு புனைப்பெயரும் வைத்துக் கொண்டார்.

பூ மழை பொழிந்தார்….பாரதி
                சுதேசிக் கப்பல் ஓட்டிய தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளை கைது செய்யப்பட்டு ரிமாண்டில் இருந்த பொழுது பாரதியார் அரசாங்கத்தின் உத்தரவு பெற்று அவரைப் பார்க்கச் சென்றார். சிறையிலே தமிழ் நாட்டுத் தேசபக்தர் அடைபட்டுக் கிடந்தார். பாரதியார் அவரைப் பார்க்கப் போகும் பொழுது ஒரு கூடை நிறையப் பூ வாங்கிக் கொண்டு போயிருந்தார். அந்தக் கூடைப் பூவையும் சிதம்பரம் பிள்ளை மீது மலர் தூவி பெருமைப்படுத்தினார்	 பாரதியார்.
                எட்டயபுரத்திலே இருக்கும் பொழுது பாரதியாருக்கும் சிதம்பரம் பிள்ளைக்கும் அவ்வளவாக மனப்பிடித்தம் கிடையாது. சூரத் காங்கிரசின் போதுதான் இருவருக்கும் நெருக்கமான நட்பு உண்டாயிற்று.

இருள் ரசிகன் பாரதி
               ஈசுவரன் தருமராஜா கோயில் தெரு என்று புதுச்சேரியிலே ஒரு தெரு இருக்கிறது. அந்தத் தெருவிலே ஒரு வீடு. வீட்டின் மாடியிலே திறந்த வெளியிலே ஒருவர் மண்டியிட்டு உட்கார்ந்திருக்கிறார்; ஆகாயத்தை அண்ணாந்து நோக்கியபடியே இருக்கிறார்; ஆகாயத்தை அப்படியே விழுங்கி விடுகிறவர் போலே பார்க்கிறாரே! அவர் யார்? அவர்தான் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
                      இரவு மணி பத்து. எங்கே பார்த்தாலும் ஒரே இருள். இயற்கைத் தேவி "இருளாயி"யுடன் கூத்தாடுகிறாள்; இருட்டு; இருட்டு; மையிருட்டு; அந்த மையிருட்டு நேரத்திலே மாடியிலே திறந்த வெளியிலே உட்கார்ந்திருக்கிறார் பாரதியார். அவருடன்கூட வேறு ஒருவரும் இருக்கிறார். திடீரென்று துள்ளிக் குதிக்கிறார் பாரதியார்.
                   "அடே! சங்கரா! இந்த இருளைப் பாரடா! இதுதான் பராசக்தி. இந்த இருளிலே மகாகாளி ஒரு பெண் மாதிரிக் காட்சி தருகிறாள் பார். இந்த மையிருட்டுத்தான் மகாகாளி. அவளைப் பார்த்துப் பிரார்த்தனை செய்" என்று ஆவேசம் வந்தவர் போலக் கூறுகிறார்.
                      தரையிலே மண்டியிட்டு உட்கார்ந்து ஆகாயத்தை அண்ணாந்து நோக்கிவிட்டார். அவ்வளவுதான்! அவர் மெய்மறந்து அந்த இருளிலே ஈடுபட்டார். அப்பொழுது ஓர் அழகான பாட்டுப் பிறந்தது.

"பின்னோ ரிராவினிலே - கரும்
பெண்மை உஅழகொன்று வந்தது கண்முன்பு
கன்னி வடிவ மென்றே - களி
கொண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா! - இவள்
ஆதி பராசக்தி தேவியடா! - இவள்
இன்னருள் வேண்டுமடா! - பின்னர்
யாவுமுலகில் வசப்பட்டுப் போமடா!

               விவேகானந்தரின் கிஷ்யையான நிவேதிதா தேவி இவருக்கு ஒரு ஆல மர இலையைக் கொடுத்திருந்தார். இமயமலையில் இருந்து எடுத்து வந்ததாம் அது. தான் மரணிக்கும் வரையில் அந்த இலையைப் பொக்கிஷமாக வைத்திருந்தார் பாரதி!
                பெண்ணுரிமையைப் பாடும் பாடும் சிந்த்தனை இவரைச் சந்தித்த பிறகே வந்ததாகப் பாரதியே கூறியுள்ளார்.

மனைவியைத் திட்டுவதை விட்ட பாரதி
            பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்ற வைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதை உணர்ந்து `பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்று தான் எழுதினார் பாரதி. மனைவியைத் திட்டுவதையும் அன்றோடு நிறுத்தினாராம்!
            லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணன் ஆகிய மூன்று தெய்வங்களின் படங்களும் வைத்திருப்பார். கிருஷ்ணர் படத்துக்குக் கீழே பிச்சுவா கத்தி இருக்கும். அதில் பெரிய பொட்டும் இருக்கும். தினமும் இதை வணங்கிய பிறகுதான் வழக்கமான வேலைகள் தொடங்கும்!

கலைஞருக்கு ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பு தந்த பாரதி….
               பாரதியை ‘மக்கள் கவி’ என்று பெயர்சூட்டித் தமிழ்ச் சமூகத்தின் உடைமையாக அண்ணா மாற்ற முயன்றார். 
              ‘நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கும் வாளும்’ என்ற பாரதியின் வரியிலிருந்து தலைவர் கலைஞர் தன் சுயசரிதைக்குத் தலைப்பைப் பெற்றுக்கொண்டார் என்பது பாரதி மீது அவருக்கு இருந்த பற்றை வெளிப்படுத்துவது. 

 ‘ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள்
 பொற்பைகள் ஜதிபல்லக்கு
 வயப்பரிவாரங்கள் முதல் பரிசளித்துப்
 பல்ஊழி வாழ்க நீயே!’ 
என்று எட்டயபுரம் ஜமீன்தாரிடம் பாரதி வைத்த மிரட்டலான விண்ணப்பத்தை அவரும் நிறைவேற்றவில்லை; பாரதி வாழ்ந்த காலத்தில் நம் தமிழ்ச் சமூகமும் நிறைவேற்றவில்லை. ஆனால், அவர் காலத்துக்குப் பிறகு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமே முரசறைந்து கொண்டிருக்கிறது, ‘எம் கவிஞன் நீ!’ என்று!

பாரதிதாசன் உருவாக்கிய பாரதி படம்…
            எங்கும் காட்சிதரும் திருவள்ளுவர், பாரதி -இருவர் படங்களும் உருவாகக்காரணமானவர் பாரதிதாசன் ஆவார்.தம்நண்பர் ஓவியர் வேணுகோபால் சர்மா வழியாக அவர் உருவாக்கியதே இன்றுள்ள திருவள்ளுவர் ஓவியமாகும்.
             இப்போதுள்ள பாரதி படமும், பாரதியைப் புகைப்பட நிலையம் அழைத்துச் சென்று பாவேந்தர் எடுத்த படமே ஆகும். அதாவது ஒளிப்படத்தில் உள்ள பாரதியார்.
             அப்படி எடுத்த உண்மை புகைப்பட உருவம் பாரதிதாசனுக்கு நிறைவு தரவில்லை. அதனை ஓவியமாக்குமாறு ஓவியர் ஆரியா என்பவரிடம் ஒப்படைத்தார். (சென்னைக் கோட்டையில் இந்திய தேசியக்கொடியை ஏற்றிய விடுதலை வீரர் பாசியமும் ஓவியர் ஆரியாவும் ஒருவரே ஆகும்.)
              உண்மையான படத்தில் பாரதிக்குப் பொட்டு கிடையாது! ஓவியத்தில் பொட்டுவைத்துப் பாரதியோடு ‘ விளையாடிய’வர் ஆரியா’.
வரலாற்று விழிப்புள்ள எவரும் பொட்டு வைத்த பாரதி படத்தை எச்சரிக்கையுடன் தவிர்த்துவிடுவார்கள்.

பாரதி ஷெல்லி ஒற்றுமை….
             பாரதியும், ஷெல்லியும் இரு வேறு புரட்சிகளின் விளைவாக உருவான கவிக்குழந்தைகள். ஷெல்லி 1789 ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சியின் குழந்தை; பாரதி 1905 ஆம் ஆண்டு நிகழ்ந்த ருஷ்யப் புரட்சியின் குழந்தை. 
              ஷெல்லியின் வாழ்க்கையோடு பாரதியின் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்கும்போது இருவருக்குமுள்ள சில ஒற்றுமை வேற்றுமைகள் நமக்கு தெரிய வரும்.  ஷெல்லியைப் போலவே, பாரதியின் பள்ளிப்படிப்பும் நீண்டகாலம்  நீடிக்கவில்லை; இருவருக்குமே அன்றைய கல்வி முறை பிடிக்கவில்லை. இருவரது வாழ்க்கையுமே போராட்டமாகத்தான் இருந்தது. பாரதியிடமும், ஷெல்லியிடமும் கருணையுள்ளத்தையும், தாராள மனப்பான்மையையும் காணமுடியும்.

ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன் பற்றி….
                ஏர்வாடியார் என இலக்கிய அன்பர்களால் அன்புடன் அழைக் கப்படும் கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் திரு நெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கண்ணதாசனால் அறிமுகப் படுத்தப்பட்டு, ஒரு கவிஞராக தமிழ்க் கவிதையுலகில் பிரபலமான இவர், கவிதைக்கென்றே தொடங்கிய “கவிதை உறவு’ இலக்கிய மாத இதழ் முப்பத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவருகிறது. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பிரபலப்படுத்திய “கலை இரவு’ நிகழ்ச்சிக்கு முன்பாகவே “கவிதை இரவு’ நிகழ்ச்சியைத் தொடங்கி தொடர்ந்து நடத்திவரும் இவர் வானொலி, நாடகத் துறையில் சுமார் ஐந்நூறுக்கும் அதிகமான நாடகங்களை எழுதி சாதனை படைத்திருப்பவர். 
                 கவிதை, நாடகம் நீங்கலாக, சிறுகதை, கட்டுரைகள், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளிலும் முத்திரை பதித்திருக்கும் இவர், பாரத ஸ்டேட் வங்கியில் எழுத்தராகப் பணியைத் தொடங்கி, அதிகாரியாக உயர்ந்ததோடு, வங்கி நடைமுறையில் இருந்த கலைச்சொற்களைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்ட வர்.

                லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் திடீரென்று மறைந்து விட, “என்று இனி காண்போம்’ என்ற தலைப்பில் நான் எழுதிய இரங்கற்பாவுக்கு சக மாணவர்கள், பேராசிரியர் கள் இடையே பாராட்டுகள் கிடைக்க, தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.

                எனது முதல் கவிதை நூலை வெளியிட்டு சிறப்பு செய்தவர் கண்ணதாசன். அது மட்டுமல்லாது, தமது இதழில் எனது கவிதைகளுக்குத் தொடர்ந்து இடமளித்தவர். இன்று கண்ணதா சனை போன்றவர்கள் அரிதாகவே தென்படுகிறார்கள். இன்று என் னைச் சந்திக்க வரும் புதியவர் களுக்கு நான் தரும் அறிவுரை ஒன்றுண்டு. “வளர்ந்தவர்களிடம் வரம் வேண்டி நிற்காதீர்கள். காரணம் உங்கள் முனையை முறித்துவிட முயற்சிப்பார்கள். எனவே வளர்ந்த பிறகு செல்லுங் கள்’ என்பேன்.
                இவரின் நாடகத் திறமை குறித்து, வலம்புரி ஜான் அவர்கள், “வானொலி ஏர்வாடியாருக்கு வசப்பட்டது போல யாருக்கும் வசப்படவில்லை’ என்று குறிப்பிட்டார். 
                 ஒருமுறை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தலைமையில் கவியரங்கில் பங்கேற்றேன். எனது முறை வந்தபோது அப்துல் ரகுமான் அழைத்தார். எப்படி அழைத்தா ரென்றால், “ராதாகிருஷ்ணன் வருகிறார் ஏர்வாடியிலிருந்து…. யாரும் பயப்பட வேண்டாம்’ என்றார். பார்வையாளர்கள் தரப்பிலிருந்து ஒரே நகைப் பொலி. கலகலப்பு அடங் கவே பல நிமிடங்கள் பிடித் தது. காரணம், ஏர்வாடி தர்க் காவுக்கு மனநோயாளிகள் சிகிச்சைக்காக கூட்டி வரப்படுவது காலங்காலமாய் நடக்கும் ஒன்று. பார்வையாளர் கள் மத்தியில் ஏற்பட்ட கல கலப்பை இரட்டிப்பாக்க அவர் கூறியதையே பிடித்துக் கொண்ட நான் இப்படித் தொடங்கினேன்.
“ஏர்வாடியிலிருந்து வருகிறவர் களைப் பார்த்து பயப்பட வேண் டாம். ஏர்வாடிக்குப் போகிறவர் களைப் பார்த்துதான் பயப்பட வேண்டும். என்னைக் கேட்டால் நாம் எல்லாருமே ஏர்வாடிகள் தான். சமூகத்தின் மனநிலையில் ஏற்படும் முரண்களை, காயங்களை குணப்படுத்தக் கூடியவர்கள்’ என்றதும்… கைத்தட்டல் காதைப் பிளந்தது. இந்த சமயோசித கவிதை நுட்பம்தான் கவியரங்கத்துக்குத் தேவை.’

அவருக்கே பிடித்த அவர் கவிதை…..
மொழியின் முன் மண்டியிட்டு வார்த்தை வரம் கேட்டேன் 
அரசியல்வாதிகள் வந்து அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள் கட்டுரையாளர்கள் சிலர் கேட்டு வாங்கிப் போனார்கள் 
மீதமிருந்ததைப் பேசவும் ஏசவும் மனைவியர் வாங்கிப் போனார்கள்
தாமதமாக வந்து நிற்கிறாயே தமிழ்க் கவிஞனே என்று 
மொழி மிகவும் வருந்தியது 
வேறு வழியின்றி வெற்றுக் காகிதத்தை மடித்து 
வழியில் என் காதலியிடம் தந்தேன் 
வாங்க மறுத்த அவள் 
நீ என்ன எழுதியிருப்பாயென எனக்குத் தெரியுமென்றாள் 
வார்த்தைகளே இல்லாத கவிதையை வாசிக்காமலேயே 
அவள் புரிந்து கொண்ட பிறகுதான் தெரிந்தது 
கவிதைக்கு வார்த்தைகள் அவசியமில்லையென்று.”

திருப்பூர் கிருஷ்ணன்:
                 அற்புதமான மனிதாபிமானியான திருப்பூர் கிருஷ்ணன் பத்திரிகையாளராகத் தடம் பதித்து, மூத்த எழுத்தாளர்களின் அன்பையும் பாராட்டையும்	பெற்றவர். பத்திரிகையாளராக- எழுத்தாளராக- கணினி இதழ்களின் ஆசிரியராக- கவிஞராக- நூலாசிரியராகத் தன்னை பண்முகத் தோற்றத்துடன் அடையாளம் காட்டியிருக்கிறார். "சிவப்பாய்ச் சில மல்லிகைகள்', "பட்டொளி	வீசி' சிறுகதைத் தொகுப்பு, "கோதைநாயகியின் இலக்கியப் பாதை', இந்திய	இலக்கியச் சிற்பிகள் வரிசை யில் "நா.பார்த்தசாரதியின் வாழ்வும்	பணியும்'	உள்ளிட்ட நூல்களின் சொந்தக்காரர்.  
                 சுஜாதாவிடம் நெருங்கிப் பழகியவர்…. திருப்பூர் கிருஷ்ணனும் சுஜாதாவும் மின்னம்பலத்தில் ஒன்றாகப் பணியாற்றிய போது…..
திருப்பூர் கிருஷ்ணன் சுஜாதா பற்ய சில சுவையான தகவல்களைத் தந்தார். அம்பலம் மின்னிதழுக்கு வந்த ஒரு கேள்வி: திருவள்ளுவர் 1330 குறட்பாக்களை எழுதியிருக்கிறார். தலைப்பு திருக்குறள்கள் என்றல்லவா இருக்க வேண்டும்? பின் எப்படி திருக்குறள் என்று ஒருமையில் பெயரிட்டார்? 
இதற்கு சுஜாதாவின் பதில், திருவள்ளுவர் கள்ளை அறவே விலக்கி விட்டார்! 
இப்படி சுவாரசியங்களின் குவியலே சுஜாதா என்கிறார் திருப்பூர் கிருஷ்ணன்.
               வண்ண நிலவனைப்போல. வண்ணதாசனைப் போல தன் எழுத்தை எழுதிவிட்டு, எழுத்தாளர் அமைதி காக்க வேண்டும் என ஆசைப்படுபவர் திருப்பூர் கிருஷ்ணன்.
திருப்பூர் கிருஷ்ணன் மேலும் சொல்லும்போது….
                சுரதா ஒரு எழுத்தாளரைப் பற்றி என்னிடம் கேட்டார். அவர் எழுத்தைப் பற்றி என் அபிப்ராயம் என்ன என்று விசாரித்தார். அவர் நன்றாகவே எழுதுகிறார் என்றேன். "ஆனால் ரொம்ப கர்வியோ' என்றார்
                  சுரதா. "ஆம்' என்றேன். "நான் அவர் எழுத்தை இதுவரை படித்ததில்லை. அவன் கர்வி என்று தெரிந்தபிறகு இனி படிக்கப் போவதும் இல்லை. அப்படியிருக்க அவரை நான் ஏன் மதிக்க வேண்டும் சொல்லுங்கள்!' என்றார் அவர்! என்னைப் போலவே பலருக்கு இந்தத் தற்பெருமைக் கலாசாரம் அலுப்பாக இருந்துள்ளது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இலக்கியப் போக்கு பிடிப்பது இருக்கட்டும். இலக்கியவாதிகளின் போக்கு பிடிக்கும்படியாக இல்லையே!'' என்றார்.
                     எல்லாருடனும் கலந்து பழகும் திருப்பூர் கிருஷ்ணன் குணம் பற்றி அவரே சொல்வது...
""என்னைப் பொறுத்தவரை அவர்கள் எந்தக் கொள்கையை வைத்திருந்தாலும் அவர்கள் எழுதும் இலக்கியத்தின் ஜீவனைத்தான் பார்க்கிறேன். மேலாண்மை பொன்னுசாமி, பொன்னீலன், சின்னப்ப பாரதி போன்றவர்கள் எனது நெருங்கிய நண்பர்கள். நான் பொதுவுடைமைவாதி அல்ல. அது அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். நான் பொதுவுடைமைவாதியாக இருந்தால்தான் அவர்களுடன் நட்பு வைத்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஏன், அவர்கள் மனைவியோ, குழந்தைகளோ, அண்ணன், தம்பிகளோகூடப் பொதுவுடைமைவாதிகளாக இல்லாமலிருக்கலாம். ஆகையால் ஒரு சித்தாந்த அடிப்படையில் எழுதுகிறவர்களுக்கு அதைச் சார்ந்தவர்கள்தாம் நண்பர்களாக இருக்க முடியும் அல்லது அவர்களுடைய எழுத்தைக் கொண்டாட முடியும் என்பது கிடையாது. இலக்கியத்தை நாம்
இலக்கியமாகத்தான் பார்க்கிறோம்.
           10 ஆண்டுகளுக்கு முன்பே, தன் எதிர்காலத் திட்டங்கள் பற்றிச் சொன்னவர்…
            "நான் திருப்பூர் குமரன் பதிப்பகம் என்கிற பதிப்பகம் ஒன்றைத்
தொடங்கியிருக்கிறேன். முதன்முதலாக இதன் மூலம் "கல்கி'யில் நான் எழுதிய "சுவடுகள்' புத்தகத்தை வெளியிட்டேன். வியக்கத்தக்க வகையில் அதற்கு வரவேற்பு கிடைத்தது. "இலக்கிய முன்னோடிகள்' என்ற தலைப்பில் பழைய முன்னோடி எழுத்தாளர்களுடனான என் நட்பு குறித்த கட்டுரைத் தொகுப்பு தயார் செய்துகொண்டு வருகிறேன். அதுபோல் "தினமணி'யில் நான் எழுதிய "இலக்கிய உலகில்' என்ற முதுபெரும் எழுத்தாளர்களைப் பற்றிய விவரத் தொகுப்பும் புத்தகமாகி வரவிருக்கிறது. டாக்டர் அ.ராமசாமியின் மேற்பார்வையில் இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களை ஆராய்ந்து டாக்டர் பட்டம் பெற்றேன். அந்த ஆய்வேட்டையும் புத்தகமாக மாற்றியமைக்க ஆர்வம் இருக்கிறது. என் இரண்டு சிறுகதைத் தொகுதிகள், இரண்டு மரபுக் கவிதைத் தொகுதிகள் போன்றவற்றையும் விரைவில் வெளியிடவிருக்கிறேன். எனக்கு ஆன்மிகத்திலும் அதிக நாட்டம் உண்டு. அந்தத் துறையிலும் எழுதத் தொடங்கியிருக்கிறேன். என் நண்பர்கள் மூலமாக என் நெடுநாள் கனவான இலக்கியப் பத்திரிகை தொடங்கும் ஆசையும் விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன்.''
             எழுத்தாளர் வறுமை ஒழிய ஆசைப்படும் திருப்பூர் கிருஷ்ணன்……
             "உண்மைதான். மக்கள் நல்ல எழுத்தாளர்களின் புத்தகங்களை விலைகொடுத்து வாங்க வேண்டும். அதுவும் இலக்கியப் புத்தகங்களை அதிகம் வாங்க வேண்டும். அப்போதுதான் எழுத்தாளர்களின் பொருளாதார நிலை உயரக்கூடும்.
கண்ணதாசனின் உதவியாளராக இருந்த சக்திவசந்தன் காலமான போது, அவரது மனைவி தன் கணவரின் உடலை மருத்துவ மனைக்கு தானமாகக் கொடுத்து விட்டார்கள். இதற்கு அறிவியல் கண்ணோட்டம் காரணமன்று. கணவரின் உடலை அடக்கம் செய்வதற்குப் பொருளாதார வசதியில்லை என்பதுதான். இந்த நிலையில்தான் சக்திவசந்தன் போன்ற நல்ல எழுத்தாளர்களை நாம் வைத்திருந்தோம் என்றால், புதிய இளம் எழுத்தாளர்கள் எப்படி வருவார்கள்? எனக் கேட்டு வருந்துகிறார்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *