மரணச் சித்திரங்கள் – ஜெயஸ்ரீயின் கதைத் தொகுப்பை முன்வைத்து ஒரு பகிரல்

"ஒரு சகமனிதனை அவன் பேசும் மொழி புரியவில்லை என்பதைக் காரணம் காட்டிப் புரிந்து கொள்ளாமல் போய்விடக்கூடாது என்கிற அக்கறையில் பிறக்கிற சமூகச் செயல்பாடுதான் மொழிபெயர்ப்பு" என்கிறார் கலை விமர்சகர் இந்திரன். மலையாள இலக்கிய உலகின் மிக முக்கியமான ஆளுமையான பால் சக்கரியாவின் சிறுகதைகளை அதன் சாரமும், ஆத்மாவும் குறையாமலும், சிதையாமலும் மொழிபெயர்த்திருக்கிறார் ஜெயஸ்ரீ. ‘வம்சி’ பதிப்பகத்தின் இவ்வெளியீடு ஒரு மொழிபெயர்ப்பின் மூலம், மிக முக்கியமானதொரு படைப்பாளியின் ஆக்கத்தினைத் தமிழில் ஆவணப்படுத்துவதோடு, "மொழிபெயர்ப்பும் மற்றுமொரு படைப்பே" Translation is transcreation என்கிற உணர்வினைத் தருகின்றது. மிக நேர்மையாக சக்கரியாவை அணுகிக், கடுமையாக உழைத்து, மிக எளிமையான நகாசுகளுடன் தமிழில் இதனை மொழிபெயர்த்திருக்கின்ற ஜெயஸ்ரீ தொடர்ந்து மொழிபெயர்ப்புத் துறையில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பினைச் செய்து வருபவர். ஆராவாரமற்ற அதிஅழகான அல்லிப் பூக்களைப் போல, படைப்புலகில் தனக்கென ஒரு இடத்தினைத் தக்க வைத்துக் கொண்டு இயங்கி வருபவர். "எளிமை, ஆற்றொழுக்கு நடை, தடைவிதிக்காத கம்பீரம், தெளிவான பெறுமொழி" முதலியவை ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளனின் மிக முக்கியமான தகுதிகள். அதோடு, ஜெயஸ்ரீ மொழிகளின் காதலியாகவே எனக்குப் படுகின்றார். மூலமொழியின் படைப்பைக் காதலுடன் அணுகிக், கவனமுடன் தழுவி, பிரசவ ஆயாசத்துடன் பெருமையுடன், படைத்திருக்கின்ற இக்கதைகள் மிக முக்கியமானவை. "அயல்மொழியிலிருக்கும் ஒரு நூலினைத் தனது நாட்டுப் பாரம்பர்யத்திற்கு ஒப்பப் பெயர்த்து எழுதுதலும் ஒரு படைப்புச் செயலே" எனும் வை.சச்சிதானந்தித்தின் கூற்றையும், "....கதைகளை மொழிபெயர்ப்பது என்றால், கூடியவரை, பாஷை வளைந்து கொடுக்கக் கூடியவரை, ஓர் குறிப்பிட்ட அன்னிய நாட்டுச் சரக்கை அதன் சாரம் கெடாமல் எடுத்துத் தருதல்"" எனும் புதுமைப்பித்தனது விளக்கத்தையும், விமர்சகர் ந.முருகேசபாண்டியன் கவனத்தில் கொள்ள வேண்டுமென்பார். நமக்கு மிக நெருக்கமான கேரளத்தின் அதிநுட்பமான படைப்பாளியை, மிக அணுக்கமாகத் தமிழில் கொணர்ந்த ஜெயஸ்ரீ நம் தமிழ் இலக்கிய உலகின் கவனத்திற்கும், ஒரு சாதாரண வாசகனின் முழுமன பாராட்டிற்கும் உரியவர். 
	பால் சக்காரியாவின் இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளை வாசித்து முடித்ததும் மரணத்தின் வாசனை சூழ்ந்த ஒரு அறையில் தனித்து விடப்பட்ட மனநிலை என்னை ஆக்கிரமித்துக் கொண்டது. உற்றார் உறவினரின் மரணங்கள், நண்பர்கள், அறிந்தவர்களின் மரணங்கள் எப்போதாவது தனியாக இருக்கும் நேரங்களில் நினைவுகளை அலைக்கழிப்பதைப் போல இருக்கவில்லை அந்த அறையின் வாசனை. உருவமில்லாத மரணம் அருகில் வந்து கைகளில் தவழ்ந்து கொண்டிருந்த புத்தகத்தில் அமர்ந்து என்னோடு பேசிக் கொண்டிருந்தது போன்ற ஒரு உணர்வு. அந்த உணர்வை என்னுள் புகுத்தியதே மொழிபெயர்ப்பாளரின் முதல் வெற்றி. 
"Death is terrifying because it is so ordinary. It happens all the time" என்றார் Susan Cheever. மரணம் சாதாரண நிகழ்வாகிவிட்டிருப்பது இன்றைய நவீன வாழ்வில் ஒரு நிதர்சனம். வரும் போகும் வழிகளில் தினம் தினம் அகால மரணம் ஒன்றையாவது பார்க்கும்படியாகத் தான் இன்றைய வாழ்க்கை இருக்கிறது. செய்தித் தாள்களைப் புரட்டினால் பக்கத்திற்குப் பக்கம் மரணச் செய்தி ஒன்றையாவது பார்க்காமல் இருக்க முடிவதில்லை. மனதை தொடும் வலிமையை இழக்குமளவுக்கு மரணம் சாதாரணமாகிவிட்டது இன்றைய வாழ்க்கையில். 
சக்காரியாவின் கதைகளில் வரும் மரணங்களும் இன்றைய நவீன வாழ்வில் அன்றாடம் நடக்கும் சாதாரண மரணங்களைப் பற்றிய சித்திரங்களே. முதல் சிறுகதையில் தொடங்கி தொகுப்பின் இறுதியான கதைவரை மரணம் சூழ்ந்த வாழ்வுச் சித்திரங்கள். மரணத்தின் அர்த்தம் புரியாத குழந்தைகளின் உலகத்தைச் சித்தரிக்கும் "சந்தனுவின் பறவைகள்" நமக்குப் பரிச்சயமான குழந்தைகளின் சிறிய உலகம்தான். தன் தாயின் மரணத்தைப் புரிந்துகொள்ள முடியாத குழந்தை பிரவேசிக்கும் கற்பனை உலகைப் பற்றிய அழகான சித்தரிப்பு. 
சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் பிச்சைக்காரர்களின் வாழ்க்கையில் நுழையும் ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவரின் பார்வையில் அவர்களது உலகத்தைப் பற்றிய சித்தரிப்பு "செய்தித்தாள்". சமூகத்தின் மையத்தின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லாத அவர்களுக்கு, மையத்தின் மனிதர்களின் வாழ்வும் சாவும் ஒன்றுதான் - அன்றைய பசியைத் தணிப்பதற்கான ஒரு வாய்ப்பு. பக்கச் சார்பு இல்லாமல் மையம் - விளிம்பு இரண்டு உலகங்களையும் சில பக்கங்களில் விவரித்துச் செல்கிறார் சக்காரியா. இத்தொகுப்பின் சிறந்த கதைகளில் இது ஒன்று. 
"கடல்" "வலை"" "ஓரிடத்தில்" "பிரபஞ்சத்தின் சிதைவுகள்" "ஒரு குறுகலான இடம்" "அல்போன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்" என்று மற்ற சிறுகதைகளிலும் வேறு வேறு பாத்திரங்கள், சூழல்களின் பார்வைகளில் இருந்து தொகுப்பு முழுவதுமே மரணத்தின் சித்தரிப்புகள். 
இதில் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை தொகுப்பின் இறுதிக் கதையாக வரும் "அல்போன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்". 

Leave her to heaven 
And to those thorns that in her bosom lodge, 
To prick and sting her 

Hamlet இல் வரும் Shakespeare இன் வரிகளை நினைவுபடுத்திய கதை. முப்பத்தாறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறக்கும் கன்னியாஸ்த்ரீயான அல்போன்சம்மா என்ற அன்னக்குட்டி தன் உடலுக்கு வெளியே வந்து தன் மரணத்தைப் பார்க்கும்போது அவளுக்கு ஏற்படும் உணர்ச்சிகளைப் பற்றிய சித்தரிப்பு அற்புதமான புதிய சிறுகதை உத்தி. அவள் உடலை அடக்கம் செய்யும் சக கன்னியாஸ்த்ரீகள், வரும் உறவினர்கள் அனைவரும் தனக்குச் செய்த உதவிகளை நினைவு கூர்ந்து வாழ்க்கைக்கு நன்றி சொல்லி காற்றோடு கறைந்துவிடுவகிறாள். 
மரணம் விடுதலையாகிறது. துயரமான வாழ்க்கையில் இருந்து விடுதலை என்ற பார்வையில் சக்காரியா இக்கதையைப் படைத்திருந்தால் மிகச் சாதாரணமான ஒரு கதையாக இருந்திருக்கும். ஆனால், வாழ்க்கையை ஒரு பேறாக, வாழ்ந்ததை மகிழ்ச்சியாக, தன்னோடு இருந்தவர்களுக்கும் உதவியவர்கள் மீதான நேசமாக, அனைவரிடமிருந்தும் நன்றியோடு விடைபெறுவதாக சிறுகதையை முடித்திருப்பதில் சக்காரியாவின் மரணம் பற்றிய பார்வையும் வாழ்க்கை பற்றிய பார்வையும் nut shellல் வெளிப்படுகிறது. Shakespeareஐப் போல அவளது ஆன்மாவை மனசாட்சியின் கூரிய முட்களால் கிழிக்கும் கொடுமையான இறுதிச் சோதனையாக மரணம் இங்கே சித்தரிக்கபடவில்லை. 
மரணம் அச்சப்படுவதற்கல்ல. துயரப்படுவதற்கும் அதில் ஒன்றும் இல்லை. அது மிகச் சாதாரணமானது. வாழ்க்கையைப் போலவே. இச்சிறுகதைகளின் நுணுக்கமான இயல்பான சித்தரிப்புகள் வழியாக, மரணத்தைப் பற்றி சக்காரியா உணர்த்தும் நிதர்சனமான வாழ்க்கை உண்மை இது. 
எந்த ஒரு சிறுகதைத் தொகுப்பையும் ஒரு themeற்குள் அடக்கிவிடமுடியாது. அப்படி ஒரு வாநஅந ற்குள் அடக்கி ஒரு தொகுப்பை வாசித்துவிடவும் கூடாது. என்றாலும், இத்தொகுப்பை வாசித்ததில் என் மனதைப் பாதித்த தீவிரமான உணர்ச்சிகளை மட்டுமே இங்கே வைத்திருக்கிறேன். அதன் முழு தீவிரத்தையும் அச்சில் பதியவைக்க முடியாது தானே?  
இத்தொகுப்பில் என்னைக் கவர்ந்த மற்றொரு அம்சம், குழந்தைகளின் உலகைப் பற்றிய சக்காரியாவின் அழகான சித்தரிப்புகள். "சந்தனுவின் பறவைகள்", "குழந்தை உண்ணி", "ஒரு குறுகலான இடம்" இந்த மூன்று சிறுகதைகளிலும் வரும் குழந்தைக் கதாபாத்திரங்களின் எண்ண ஓட்டத்திலேயே நனவோடை உத்தியைப் பயன்படுத்தி கதையைச் சொல்லியிருப்பது நினைக்க நேரமில்லாத குழந்தைமை நினைவுகளுக்கு இட்டுச் சென்றது. அதே போல, "ஓரிடத்தில்" "பிரபஞ்சத்தின் சிதைவுகள்" இரு கதைகளும் குழந்தைகளுக்குச் சொல்லும் நீதிக் கதைகளை ஒத்த மாதிரியில் தீவிரமான வாழ்வியல் நெருக்கடிகளை கவித்துவமான மொழியில் சித்தரிப்பது தமிழ் இலக்கியத்தில் வழக்கில் இல்லாது போயிருக்கும் ஒரு கதை சொல்லல் மரபை நினைவூட்டுவதாக இருக்கிறது. 
"சலாம் அமெரிக்கா" "யாரோ வாசலில்" "கடல்" "கிரேன் ஷாட்" "நமக்கு வசிக்க முந்திரித்தோப்புகள்" ஆகிய சிறுகதைகள் கேரளச் சமூகத்தின் நடுத்தர, உயர் நடுத்தரப் பிரிவினரின் நெருக்கடிகளை ஒரு கோட்டுச் சித்திரமாக உருவகித்துக் காட்டும் கதைகள். சிறுகதை வடிவத்திற்கே உரிய, வாழ்க்கையின் ஒரு பக்கத்தை slice of life கணகச்சிதமாக உருவ நேர்த்தியோடு விவரித்துக் காட்டுபவை. 
"அலறும் எலும்புக்கூடு" ஒரு பரிசோதனை முயற்சிக் கதை. ஒரு பின்நவீனத்துவ பாணிக் கதை என்றும் சொல்லலாம். மர்மக் கதையா, துப்பறியும் கதையா, மாய மந்திரக் கதையா என்ற குழப்பத்துடனேயே வாசிப்பவரை இழுத்துச் சென்று சொல்லப்படுவது ஒரு கதைதான் என்பதை இறுதியில் சொல்லும் meta-fiction. இதே பாணி "வலை" கதையில் அதன் ஆரம்பத்திலேயே அந்தக் கதையை ஊர் பெயர் தெரியாத ஒரு நபரிடம் கேட்ட கதையாகக் கொண்டு போவதும் இப்போது பின்நவீனத்துவ கதை சொல்லல் முறையாக நன்றாக அறியப்பட்ட ஒன்று. இந்த கதை சொல்லல் முறைகளை எந்த நெருடலும் இல்லாமல் இலாவகமாக கையாண்டிக்கிறார் சக்காரியா. 
தமிழுக்கு பால் சக்காரியா புதியவர் இல்லை என்றாலும், இத்தொகுப்பு அவரது படைப்புலகத்தை மேலும் விசாலமாக அறிமுகப்படுத்தி வைப்பதாக இருக்கும். தமிழ் படைப்புலகத்தில் தற்சமயம் சிறுகதைகளில் ஏற்பட்டிருக்கும் தேக்கத்தை உடைப்பதாக இருந்தால் இத்தொகுப்பு மேலும் சிறப்பு பெறும். 
ஜெயஸ்ரீயின் நெருடல் இல்லாத மொழியாக்கத்தில் சரளமாக வாசித்த இன்பம் சுகமானது. கேரள சமூகத்தின் நவீன வாழ்க்கை நெருக்கடிகளின் சில துளிகளை இச்சிறுகதைத் தொகுப்பின் மூலம் தமிழ் வாசகர்கள் அறியும் வாய்ப்பை உருவாக்கித் தந்த அவருக்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும். தமிழுக்கு மிக நெருக்கமான கொஞ்சு மலையாளத்தில் இருந்து அவர் மேலும் படைப்புகளைத் தமிழுலகுக்குத் தரவேண்டும். 
மெக்ஸிகோ நாட்டுக்கவிஞர் அக்டோவியா பயஸ் (Octovio Payaz) சொன்னார், "ஒவ்வொரு வாசகமும் தனித்துவமானது அதே நேரத்தில் அது வேறொரு வாசகத்தின் ஒரு மொழிபெயர்புமாகும். எந்த வாசகமும் முழுக்க முழுக்க அசலானதுமல்ல. ஏனெனில் மொழி என்பதே  அடைப்படையில் ஒரு மொழிபெயர்ப்புதான்". வார்த்தைகளற்ற குறிகளையும், சைகைகளையும் மொழிபெயர்த்த அந்த முயற்சியில் உருவானதுதானே மொழி என்பதும்! மேலும் அவர் சொல்வது, "ஓரளவுக்கு ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் ஓர் அசலான கண்டுபிடிப்பு ஆகும்".
அவ்வகையில் ஜெஸ்ரீயின் இந்த மொழிபெயர்ப்பும் ஒரு அசலான கண்டு பிடிப்பே!  
                                                                         * * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *