கலையின் பிறப்புபற்றி மிகச் சிறந்த எழுத்தாளரும், பேராசிரியருமான நபக்கோவ் ஒரு நாட்டார் கதை மூலம் சொல்லியதை சற்றே தழுவி நம்மூர்க் கதைமூலம் முன்வைக்கிறேன்:

‘புலி வருது, புலி வருது’ என்று அலறும் ஆடு மேய்க்கும் சிறுவனை உண்மையிலேயே புலி வந்து அடித்துக் கொன்று சாப்பிட்ட நாளில் இலக்கியம் பிறக்கவில்லை. ஒரு நீதிதான் கற்பிக்கப்பட்டது. மாறாக, புலியே வந்திராதபோது, ‘புலி வருது, புலி வருது’ என்று சிறுவன் தன் கற்பனையில் புலியை உருவாக்கி அலறிய நாள்தான் இலக்கியம் பிறந்த நாள். அவன் அடிக்கடி பொய் சொல்லி ஏமாற்றியதால் அவனைப் புலி அடித்துச் சாப்பிட்டதென்பது தற்செயலானது. ஆனால், கலையின் மந்திரமென்பது, அவன் தன் கற்பனையில் திட்டமிட்டு உருவாக்கிய புலியின் நிழலில் தங்கியிருக்கிறது. அது, புலி பற்றிய அவனுடைய கனவிலிருக்கிறது. அவன் ஒரு மந்திரவாதி; ஒரு கண்டுபிடிப்பாளன். எனவே, அவன் ஒரு கலைஞன். அவனிடமிருந்தே கலை பிறக்கிறது.(சி.மோகன் கட்டுரைகள் : 35) இத்தகைய கலைஞர்கள், படைப்பாளிகளைக் கொண்டாடுபவை, மக்களுக்குக் கொண்டு சேர்ப்பவை பதிப்பகங்களே. இந்த நூற்றாண்டின் ‘Kindle’ உலகின் தாக்கத்திற்கு ஈடு கொடுத்து இன்றைக்கு 100 புத்தகங்களை வெளியிட்டுச் சாதனை செய்திருக்கிறது NCBH நிறுவனம்.

நிறுவனத்தின் தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்கள் நம் காலத்தின் பொக்கிஷம்.

* காந்தியின் கூற்று

தனது நீண்ட நெடிய பொதுவாழ்க்கையில் தமிழகத்தின் பெருமையாக விளங்குகின்ற அய்யா. பழ.நெடுமாறன், அன்பிற்கும் மரியாதைக்குமுரிய அய்யா தா.பாண்டியன், அறிவும், அறவுணர்வும் அழகாக இணைந்திருக்கின்ற பேராசிரியர் வீ.அரசு, பேராசிரியர் ந.முத்துமோகன், மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், வரவேற்புரை நல்கிய சண்முகம் சரவணன், நன்றியுரை கூற இருக்கின்ற தி.இரத்தினசபாபதி அவர்களுக்கும் வணக்கம்.

முதலியோருக்கு வணக்கம்.

இன்றைய தினம் பல்வேறு ஆளுமைகளின் புதிய படைப்புகள் வெளியிடப்படுகின்றன. தமிழறிஞர்களின் காலத்தை வென்று நிற்கும் புத்தகங்கள், பல்வேறு எழுத்தாளர்களின் நாவல் மற்றும் சிறுகதைகள், கவிதை நூல்கள், விமர்சனக் கட்டுரைகள், புதிய பரிமாணங்களில் குழந்தைகளுக்கான நூல்கள், தமிழ் இலக்கிய இலக்கண நூல்க்ள, பொது அறிவு, சுய முன்னேற்ற நூல்கள், பொது அறிவு, சுய முன்னேற்ற நூல்கள், பல்வேறு உலக மொழிகளின் மொழிபெயர்ப்புகள் என ஒரே நேரத்தில் 100 புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.

தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறனின் பத்தாண்டுகளுக்கும் மேலான உழைப்பில் உருவான காலத்தை வென்ற காவிய நட்பு எனும் ரஷ்ய இந்திய பண்பாட்டு உறவின் மகத்துவத்தை விவரிக்கும் நூல்,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் எழுதிய சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ ஆகிய வாழ்க்கை வரலாற்று நூல்களும் வெளியிடப்படவுள்ளன.

ஈக்வடோரின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ போர்ஜா 2006 டிசம்பர் 1 இல் பின்வரும் சம்பவத்தை நம்மோடு பகிர்கின்றார் :-

“பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி மிட்டெரான்டிடம் நான் உரையாடிக் கொண்டிருந்தேன்.” உஙகள் மீது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்திய அரசியல் தலைவர் யார்? என்று நான் கேட்டேன். “நான் மூன்று தலைவர்களைச் சொல்வேன். டிகால், கோஸ்சேவ், காஸ்ட்ரோ” என்றார். காஸ்ட்ரோவுமா? என்று போர்ஜா வினவினார். ஆம். அவர் எதிர்காலத்தைப் புரிந்துகொண்டவர் என்பதோடு வரலாற்றுணர்ச்சி உடையவர் என்பதால் என்று அவர் மிட்டெரான்ட் பதில் அளித்தார். (ஃபிடல் காஸ்ட்ரோ என் வாழ்க்கைநா.தர்மராஜன் :21) இங்கு அவ்வாறு நான் மிக மதிக்கின்ற மூன்று தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களோடு மேடையைப் பகிர்ந்துகொள்வதில் பெரு மிகழ்ச்சி.

தலித்தியமும் உலக முதலாளியமும்சமூகவியல்பொருளியல் ஆய்வு எனும் எஸ்.வி.ராஜதுரை அய்யாவின் மிக முக்கியமான நூலின் திருத்தப்பட்ட மறுபதிப்பு இன்று வெளியிடப்படுகிறது. உலகமயமாக்கல், நவதாராளவாதம், உலக வங்கி, சர்வதேச நிதியம், உலக வர்த்தக அமைப்பு, தடையற்ற சந்தை, வெளிநாட்டு நேரடி மூலதனம், நிதி மூலதனம் – இவை ஒட்டுமொத்தமாக இந்திய வெகுபக்களையும், குறிப்பாகத் தலித் மக்களையும் எவ்வாறு சிதைக்கின்றன என்பதை எளிமையாக இந்தநூல் சுட்டுகிறது.

எனக்குப் பல விஷயங்களில் அறிவுக் கண்ணை திறந்துவிட உதவியவை SVR அய்யாவின் நூல்கள். மிகக் குறிப்பாக இந்தியாவிற்கு இடதுசாரி, ஜனநாயக சக்திகளின் பங்களிப்பு குறித்துப் பலமுறை மிகத் தெளிவானதொரு வழிகாட்டியாக விளங்கியுள்ளது அவரது நூல்கள். இட ஒதுக்கீடு என்கிற மிக முக்கியமான பிரச்சனையில் முன்னாள் பிரதர் நேரு அவர்களது அணுகுமுறை குறித்த SVR அய்யாவின் கட்டுரை அரசியல் கட்சிகளின் இரட்டை நிலப்பாடு சிறுபான்மையினர் நிலை குறித்த எனது கட்டுரை ஒன்றிற்கு மிக வலுவான ஆதாரமாக இருந்தது.

“இன்றைய உலகச் சுற்றுச்சூழல் சிதைவிற்குக் காரணம் வளர்ந்த நாடுகளில் உள்ள சிறுபான்மையினரின் செயல்களே” என்று சொன்ன ஜான் வோக்லர் (John Woglar) எனும் முதலாளித்துவ அறிஞரின் அபத்தமான, மிகச் கண்டிக்கத்தக்க கூற்று நினைவிற்கு வந்தது. இந்தியா இப்போது வளர்ந்துவருகின்ற நாடுகளின் பட்டியலில் இருந்து வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இணைந்து விட்டதாகவும், வல்லரசு குறித்துக் கனவு காண வேண்டுமெனவும் தலைவர்கள், அறிஞர்கள், மேதைகள் அவ்வப்போது நமக்கு அறிவுறுத்துகிறார்கள். ஆனால் உலகத்தைக் குப்பைத் தொட்டி ஆக்கிவிட்டதாகக் குற்றம் சாட்டப்படுவதும், சுமத்தப் படுவதும் இன்னமும் நமது சிறுபான்மையினர் மீது தான். ஏன் நமது முன்னாள் பிரதமர் நேரு அவர்களே இட ஒதுக்கீடு பற்றிய விவாவதத்தில் சர்ச்சைக்குரிய, வருத்தத்திற்குரிய கருத்தொன்றை பதிவு செய்திருக்கிறார். காகா காலேல்கர் என்பவரது தலைமையில் மத்திய அரசாங்கம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மேம்பாட்டுக்கான திட்டங்களைத் தயாரிக்க உதவுவதற்கு ஒரு பட்டியல் தயாரிக்கச் செய்தது. “2399 சாதிகளைப் பிற்பட்ட சாதிகள் என்று பட்டியலிட்ட காகா காலேல்கர் அந்த அறிக்கையுடன் இணைத்திருந்த தனிப்பட்ட கடிதத்தில், ‘சாதிரீதியாக இட ஒதுக்கீடு தருவதில் எனக்கு விருப்பமில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்! எப்படியிருந்தாலும் இந்த அறிக்கையின் மீது எந்த நடவடிக்கையையும் நேரு அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

மாறாக, ‘சோசலிஸ்ட்’ நேரு, மத்திய அமைச்சரவையைக் கூட்டி இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டியதில்லை என்று முடிவு செய்ததுடன் நிற்காமல் 1961இல் மாநில முதலமைச்சர்களுக்கு ஒரு நேர்முகக் கடிதம் (demi official letter) எழுதினார்: ‘பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு கொடுங்கள். சாதிரீதியாக இட ஒதுக்கீடு என்பது திறமையைப் பலி கொடுத்துவிடும்’ என்பதுதான் அதன் சுருக்கம். அக் கடிதம் சொல்கிறது:

தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் ஆகியோருக்கு உதவி செய்தல் குறித்த சில விதிகளுடனும் மரபுகளுடனும் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்பது உண்மைதான். அவர்கள் உதவி பெற வேண்டியவர்கள்தான். ஆயினும்கூட நான், எல்லாவகையான இட ஒதுக்கீட்டையும் அதுவும் குறிப்பாகப் பணித்துறையில் (services) இட ஒதுக்கீட்டை விரும்பவில்லை. திறமைக் குறைவுக்கும் இரண்டாந்தர நிலைகளுக்கும் வழிவகுக்கும் அனைத்தையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன். எனது நாடு எல்லாவற்றிலும் ஒரு முதல்தர நாடாக இருப்பதையே விரும்புகிறேன். இரண்டாந்தரத்தை எந்தக் கணத்தில் நாம் ஊக்குவிக்கிறோமோ அக்கணமே நாம் ஒழிந்துவிடுவோம்…வகுப்பு மற்றும் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடுகளைச் செய்வோமேயானால், புத்திசாலித்தனமும் திறமையும் கொண்டவர்களை மூழ்கடித்து விடுவோம்.

நாம் எல்லா வகைகளிலும் பிற்பட்ட குழுவினருக்கு உதவி செய்வோமாக! ஆனால் ஒருபோதும் திறமையைப் பலி கொடுத்து அல்ல. இரண்டாந்தர மனிதர்களைக் கொண்டு நமது பொதுத்துறையையோ அல்லது வேறெந்தத் துறையையோ நாம் எப்படிக் கட்டப் போகிறோம்? (மேற்கோள் கட்டியவர்: அருண் ஷோரி, இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை பதிப்பு, 17.8.1990, எஸ்.வி.ராஜதுரை, இந்து இந்தி இந்தியா, மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், 1993, பக்.11-12)

அதாவது நேருவின் பார்வையில் பிற்படுத்தப்பட்டோர் என அரசமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டவர்கள் அனைவரும் (தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உட்பட) இரண்டாந்தரத்தினர் தான். மண்டல் குழு அறிக்கையின் சில பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தியதை எதிர்த்துப் போர்க் குரல் எழுப்பிய அருண் ஷோரி, நேருவின் கடிதத்தைப் பயன்படுத்திக் கொண்டது வியப்பல்ல. காகா காலேல்கர் அறிக்கை மீது நேருவைப் போலவே இந்திரா காந்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.” (கல் தெப்பம்எஸ்.வி.ராஜதுரை : 53,54)

இரா.காசிராசன் எழுதிய உலகக் காப்பியங்கள் எனும் புத்தகமும் NCBH வெளியீடுதான். ஒரு ஆங்கில இலக்கிய மாணவி, தமிழிலக்கியத்திலும் ஓரளவு பரிச்சயம் கொண்டவள் என்றவகையில் காப்பியங்கள் குறித்துப் புரிதல் இருந்தாலும் எனக்குத் தெரியாத பல விஷயங்களை இந்தப் புத்தகம் உள்ளடக்கியுள்ளது. தமிழ்க் காப்பிய ஆய்வாளர்களுக்கு உதவுகின்ற அருமையான புத்தகமிது.

உலகத்தில் மனிதனுடைய முதல் நாகரிகம் தோன்றிய இடம் மெசப்பொத்மியா – இன்றைய ஈராக். கிறஸ்து பிறப்பதற்கு 5,000 வருடங்களுக்கு முன் தோன்றிய நாகரிகம்.

கி.மு.1700 இல் – இங்கேதான் ஹமுராபி என்ற மன்னன் ஆண்டு உலகத்தின் முதல் சட்டத்தைத் தொகுத்தான்.

பின், உருக் என்ற நாட்டைக் கில்காமேஷ் என்ற அரசன் கி.மு. 2750 – 2500 ஆண்டிருக்கிறார். அவனைப் பற்றிய காவியம் அதற்குப் பின் எழுதப்பட்டது. இதுதான் உலகத்திலேயே எழுத்தில் பாதுகாக்கப்பட்ட ஆதிகாவியம்.

சுமேரியர்களின் ஆப்பு எழுத்தில் (Cunieform) எழுதப்பட்டு, இன்றுவரை இவை 11மண் தட்டைகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கில்காமேசை பல தடவை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். சமீபத்திய மொழிபெயர்பின் முதல் வரிகள் இப்படி ஆரம்பிக்கின்றன –

The one who saw all
I will declare to the world
The one who knew all
I will tell about.

இந்த கில்கெமிஷ் குறித்துப் புதிய செய்தியொன்றையும் இந்த நூல் எனக்கு ஆச்சர்யங்களோடு தந்தது.

“இந்திய இதிகாசமான மகாபாரதத்தில் வரும் ‘கர்ணன்’ சூரிய பகவானுக்கும் குந்திதேவிக்கும் மகனாகப் பிறந்தவன் என்பதை நாம் அறிவோம். இதேபோன்று கி.மு.3000 – ஆண்டுகளுக்கு முன் எழுந்த ‘கில்கெமிஷ்’ காப்பியத் தலைவனும் சூரியபகவான் ஷாமாவின் மகனாகப் படைக்கப்படுகிறான். கனவு பற்றிய கோட்பாடும் காப்பியத்திற்கே உரிய தனிச் சிறப்பு. சிலப்பதிகாரத்தில் வரும் மூன்று கனவுகள் காப்பியப் பின் நிகழ்வை முன்னுணர்த்துகின்றன. கில்கெமிஷ் துறக்கத்திலிருந்து விண்மீன் பெயர்ந்து தன்மீது விழுவதாகக் கனவு காண்பதும், பாண்டிமாதேவி பகலில் விண்மீன் விழுவதாகக் காண்பதும் ஒப்புடையன. இவ்விரு கனவுகளும் தீ நிமித்தமாக அமைந்து, பின்நிகழ்வை முன்னுணர்த்தும். கில்கெமிஷ் இறவாமல் வாழவேண்டித் தன் மூதாதையைத் தேடிச் செல்கிறான். வழியில் தலை வான்வரை நீண்டும், கால் பாதாளம் வரை ஆழ்ந்தும் இருக்கும் ஒரு அரக்கனைச் சந்திக்கிறான். இவனது தோற்றம், மாலயன் காணச் சிவபெருமானின் நின்ற கோலத்தை நினைவுறுத்துகிறது. கில்கெமிஷ் பெற்ற வாழ்வுச் செடி (Plant of Life) அவ்வகைக்கு அதியமான் கொடுத்த நெல்லிக்கனியை நினைவுறுத்துகிறது. இறந்தபின் உயிர் அடையும் நிலைபற்றிப் பேசும் கில்கெமிஷ் காப்பியச் செய்தி, யசோதர காவியத்தை நினைவுபடுத்துகிறது,” என்று காசிராஜன் தருகின்ற செய்திகள் புதிதாகஉள்ளன.

கி.மு.2000 ஆண்டுகட்கு முற்பட்ட பினீசிய காப்பியமான ‘கலவேலா’ ஆசிரியர் திருமணம் பற்றிப் பேசுவது வியப்பாக உள்ளது. ‘நாய்ப்பட்டியில் சங்கிலியால் கட்டப்பட்ட நாயின் வாழ்க்கை போன்றது பொண்ணுக்குத் திருமணம்’ என்கிறார் அவர். (உலகக் காப்பியங்கள்இரா.காசிராசன் : iv)

தமது வாழ்நாளில் வரலாற்றிலும் தொல்கதைகளிலும் (Legend) இடம்பெற்றுப் புகழடைந்தவர்கள் சிலரே. காஸ்ட்ரோ அவர்களில் ஒருவர். உலக அரசியலில் அவர் கடைசி மாவீரர். நெல்சன் மண்டேலா, ஹோ-சி-மின், பேட்ரிஸ் லுமும்பா, அமில்கார் காப்ரால், சேகுவேரா கார்லோஸ் மரிகெல்லா, காமில்லோடார்ரெஸ், மெஹ்தி லென்பார்க்கா ஆகியோர் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு நீதிக்காக அரசியல் களத்தில் போராடினார்கள். அநீதிகளும் விருப்பு வெறுப்புகளும் நிலவிய உலகத்தில், அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் இரண்டாகப் பிரிந்திருந்த உலகத்தை மாற்றுவதற்குப் பாடுபட்டார்கள். கம்யூனிசம் உன்னதமான எதிர்காலத்தை உருவாக்கும். அநீதி, இனவெறி, வறுமை ஆகியவற்றை சில பத்தாண்டுகளில் உலகத்திலிருந்து ஒழிக்கமுடியும் என்று உலக முழுவதும் முற்போக்கு எண்ணங்களைக் கொண்டவர்கள் கருதினார்கள். (ஃபிடல் காஸ்ட்ரோ என் வாழ்க்கைநா.தர்மராஜன் :9)

எனவே அய்யா தா.பாண்டியன் அவர்களது காஸ்டிரோ, சேகுவாரா பற்றிய நூல்கள் மிக முக்கியமானவையாக இருக்குமென்று நான் கருதுகின்றேன்.

தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமை தேவதேவனின் ஹே.மா (அதி உச்சம்) எனும் அருமையான தொகுப்பென்றும் வெளியிடப்பட்டுள்ளது. சேகுவேரா நமது நினைவுக்கு வருகிறார். “மிகவும் அதிகமான அன்புணர்ச்சியிலிருந்துதான் மாபெரும் புரட்சி பிறக்கிறது” என்றார் அவர்.

பென்னம்பெருங் காரியங்களெல்லாம் :
பென்னம் பெருங் காரியங்களெல்லாம்
கூடவே ஓர் அச்சத்தையும் தருகின்றன,
சின்னஞ் சிறு செயல்களில் மட்டுமே
எனக்கு நின் புன்னகை தெரிவதாலா?

ஆயிரமாயிரம் சிற்றிலை அசைவுகளும்
மண்துகள்கள் கோடி
பேணும் வேர்த் துடிப்புகளும்தானா
பேருருக்கொண்ட இந்த அரசமரத்தின்
அழகின் இரகசியம்?

அச்சம் தவிர்ந்து நின் மகவானேன்
அன்னையே நின் பேருருவினை நான்
எங்கு காண்கையிலும்!
(ஹே.மா! (அதி உசசம்) – தேவதேவன் : 54)

எனும் “to see Eternity in a Flower” என்கிற அற்புதமான கவிதைகளைக் கொண்ட நூலாக அது எனக்குப் படுகின்றது.

Dr.ஜான்சன், தனி மனிதராக, மூன்று ஆண்டுகளுக்குள், “A Dictionary of the English Language” ஐத் தொகுத்து முடிப்பேன் என்று அறிவித்தபோது, அவரை “அது எப்படி French Academy ஐச் சார்ந்த 40 French காரர்கள் 40 வருடங்களில் முடித்ததை, நீங்கள் எப்படி 3 ஆண்டுகளுக்குள் முடிக்கத் திட்டமிடுகிறீர்கள்?” எனச் சிலர் சவாலாகக் கேட்டார்களாம். அவர் சிரித்தவாறே சொன்னராம், “As three (3) to 16,000, so was the proportion of the Englishman to a French man” என்று.

“As 3 to 16,000 so is the proportion of one Tamil Writer than to other Writers என்பதை மெய்ப்பிக்கின்றது NCBH இன் இந்த 100 புத்தக வெளியீடுகள்!

காஸ்ட்ரோவுக்குப் பிடித்தமான இலக்கியப் பாத்திரம் டான்க்விஸோட். காஸ்ட்ரோவுடன் பேசியவர்கள் (அவருடைய எதிரிகளில் சிலர் கூட) அவர் நேர்மை, சமூக நீதி ஆகிய உணர்ந்த சிந்தனைகளால் வழிநடத்தப்படுகிறார் என்பதை ஒத்துக்கொள்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளரான ஆலிவர் ஸ்டோன் பின்வருமாறு கூறினார். “உலகத்தின் பேரறிஞர்களில் ஒருவர் காஸ்ட்ரோ. அவர் தப்பிப் பிழைத்தவர். அவர் ஒரு க்விஸோட். அவரை அவருடைய தன்னம்பிக்கை மற்றும் புரட்சியை நான் போற்றுகிறேன்” என்றார். (ஃபிடல் காஸ்ட்ரோ என் வாழ்க்கைநா.தர்மராஜன் :21)

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *